ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஆற்றுப்படை நூல்களில் புறத்திணைக் கூறுகள்


ஆற்றுப்படை நூல்களில் புறத்திணைக் கூறுகள்

 பா.குப்புசாமி
உதவிப்பேராசிரியர், தமிழ்ப்பிரிவு ,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சிதம்பரம்.

          ற்றுப்படை நூல்கள் புறத்திணையைச் சார்ந்தது என்பது அனைவரும் அறிந்தது. வறுமையில் வாடும் கலைஞர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பரிசில் பெற்று தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வர்.  அவ்வாறு அவர்கள் புகழ்ந்து பாடும் பாடல்கள் வீரம், கொடை முதலான புறத்திணை சார்ந்தவைகளாக அமைந்திருக்கும்.  அப்படி அவர்கள் பாடிய பாடல்களில் தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணை இலக்கணங்கள் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.  அப்படி அமைந்த பாடல்கள் சிலவற்றை இங்கு காணலாம். தொல்காப்பியர் வகுத்துள்ள  புறத்திணை ஏழனுள் பாடாண்திணை என்பது முழுக்க முழுக்க ஆற்றுப்படையோடு பொருந்தும் திணையாகும்.  எனவே அதை விடுத்து பிற திணைகளை ஆற்றுப்படை நூல்கள் எவ்வாறு கையாண்டுள்ளன என்பன பற்றி இனி காணலாம்.

குடிநிலை

          வெட்சித் திணையில் வரும் குடிநிலை என்னும் துறை அரசனது குடிச்சிறப்பைப் போற்றும் துறையாகும்.  இத்துறையில் மன்னனது பரம்பரை அவர்களது வீரம் கொடை முதலிய சிறப்புகள் அனைத்தும் தொகுத்துத்தரப்படும் இத்தகு குடிநிலையைத் தொல்காப்பியர்,

          ‘‘மறங்கடைக் கூட்டிய குடிநிலை’’            (தொல் – பொருள். 62)
என்று குறிப்பிடுகின்றார். தொல்காப்பியரது இந்த இலக்கணத்திற்கு ஏற்ப சிறுபாணாற்றுப்படையில் வரும் ஒருபாடல் நல்லியக்கோடனது குடிப்பெருமையைப் பற்றிப் பேசுகிறது அப்பாடலடிகள் வருமாறு,

          ‘‘நன்மா இலங்கை மன்ன ருள்ளும்
          மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்
          உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்’’
(சிறுபாணாற்றுப்படை. 121-123)

இதேபோன்று பெரும்பாணாற்றுப்படையில் ஒருபாடல் தொண்டைமான் இளந்திரையனது குடிப்பெருமையைப் போற்றுகின்றது.  அப்பாடல் வருமாறு,

          ‘‘முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த்
திரைதரு மரபின் உரவோ னும்பல்’’ 
                (பெரும்பாணாற்றுப்படை. 30-31)
இளந்திரையனது குடிப்பெருமையைக் கூறிய இப்பாடலைப் போன்று பெரும்பாணாற்றுப்படையில் வேறொரு இடத்திலும் இளந்திரையனது  குடிப்பெருமை சுட்டப்பெற்றுள்ளன.  அப்பாடலடிகள் வருமாறு,

‘‘யான தாக்கினும் அரவுமேற் செலினும்
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூன்மகன் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த’’  
                               (பெரும்பாணாற்றுப்படை. 34-37)
மேலே சுட்டப்பட்ட பாடல்கள் மன்னனது குடிப்பெருமையைப் பற்றிப் பாடப்பட்ட குடிநிலை என்னும் துறைக்குரிய பாடல்களாகும். மன்னர்களைப் புகழ்வதோடு  இப்படி முன்னோர்களைப் புகழ்வதாலும் மன்னர் மனம் மகிழ்வடையும் என்பதை கலைஞர்கள் அறிந்திருந்தனர். எனவே பரிசில் பெற வரும் புலவர்கள் அரசனது முன்னோர் வரலாறுகளை அறிந்து வைத்துக் கொண்டு செல்வர்.

பூவைநிலை

          பாடப்படும் மன்னனை தெய்வத்தோடும் சூரியனோடும் ஒப்பிட்டுப்பாடுவது பூவை நிலையாகும். உலக மக்களால் மிக உயர்ந்தவர்களாக் கருதப்படுவோர் தேவர்கள். இதேபோன்று மிக உயர்ந்த பொருளாகக் கருதப்படுவது சூரியன் எனவே மன்னனைப் புகழ எண்ணும் புலவர்கள் அவனை தெய்வத்தோடும் சூரியனோடும் உவமையாக வைத்து பாடுகின்றனர்.  இதனைத் தொல்காப்பியர்,

          மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில்
          தாவா விழுப்புகழ்ப் பூவைநிலை’’             (தொல் - பொருள். 63)
என்று குறிப்பிடுகின்றார்.  இந்த இலக்கணத்தோடு பொருந்திவரும் பொருணராற்றுப்படை பாடல் ஒன்று வருமாறு,

          ‘‘பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
          வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்கு’’
          (பொருநராற்றுப்படை. 135-136)
இப்பாடல் கரிகால் வளவனை சூரியனோடு ஒப்பிட்டுப் பாடுவதாக அமைந்துள்ளது. உலகில் மிக உயர்ந்து மிக்க ஒளியினைப் பரப்பி வின்னில் படர்ந்திருப்பது போன்று கரிகால் வலவன் உலக மக்களை மேன்மையான இடத்திலிருந்து காக்கின்றன் என்னும்படி உவமையாகப் பாடப்படுகின்றது.

கொற்றவள்ளை

          தோற்ற மன்னன் வென்ற மன்னர்க்கு வரி செலுத்துவது அக்கால வழக்கு. வென்ற மன்னர் அப்பொருள்களைத் திரட்டி வறுமை என்று வருவோர்க்குக் கொடையாக அளிப்பான். பாட வரும் புலவர்களும் அத்தகு வறுமை நிலையில் இருப்பதால் அத்தகைய வரிப்பணத்தைப் பற்றி நினைவு கூர்வார்கள்.  இதனைத் தொல்காப்பியர் வஞ்சித் திணையில் கொற்றவள்ளை என்ற துறையில் பின்வருமாறு குறப்பிடுகின்றார்,

‘‘குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளை’’               (தொல் - பொருள். 65)
இந்தத் துறையின் இலக்கணப்படி அமைந்த பொருநராற்றுப்படை பாடல் ஒன்று வருமாறு,
          ‘‘உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனித் தொருநாள்
          செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய
          செல்வ செறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென
          மெல்லெனக் கிளந்தன மாக வல்லே’’                       
 (பொருநராற்றுப்படை. 119-123)
இப்பாடல்மூலம் கரிகால் வளவனிடம் தோற்ற அரசர்கள் திறையாக பொருள்கள் பலவற்றைக் கொண்டுவந்து குவித்ததை அறியமுடிகிறது. இதன் மூலம் கரிகால் வலவன் பல நாடுகளுக்குச் சென்று பல மன்னர்களை வென்றுள்ளான் என்பது தெறிகிறது. குவிந்துள்ள திறைப்பொருள் தமக்கு சிறிது கிடைக்கும் என்ற எண்ணத்தில் பொருநர்கள் படியுள்ளதை இப்பாடல் தெளிவு படுத்துகிறது.

குற்றுழிஞை

          தனது படை வலிமை குன்றிய நிலையில் வீரன் ஒருவன் தன் உயிர் தப்பினால் பொதும் என்று பின் வாங்கி ஓடாமல் இறந்தாலும் போராடி இறக்க வேண்டும் என்று  தான் ஒருவனாகவே நின்று பகைவருடன் மோதுவது குற்றுழிஞை ஆகும்.  இதனைத் தொல்காப்பியர் உழிஞைத் திணையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,

          ‘‘திறல்பட ஒருதான் மண்டிய குறுமையும்’’  (தொல் - பொருள். 68)
இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை அழிபடை தாங்கல் என்ற துறையில் குறிப்பிடுகிறது.  தொல்காப்பியரது இந்த இலக்கணப்படி சிறுபாணாற்றுப்படையில் வரும் ஒருபாடல் வருமாறு,

          ‘‘விரிகடல் வேலி வியலகம் விளங்க
          ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்’’
          (சிறுபாணாற்றுப்படை. 114-115)
இப்பாடலில் நல்லியக் கோடனது படை வலிமை குறைய அவன் மட்டும் தனியனாக நின்று போராடி வென்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் போர் வீரர்கள் இவ்வாறு படப்படுவார்கள். இலக்கண எடுத்துக்காட்டுகளும் இவ்வாறே அமைந்துள்ளன. ஆனால் ஆற்றுப்படை நூல்களில் மன்னன் தனியாக நின்று போரிட்டதாகப் பாடப்பட்டுள்ளன.

 மண்ணு மங்கலம்

          மதில் மேல் நின்று போர்புரிந்து பகைவனது மணிமுடியைக் கைப்பற்றுவது மண்ணுமங்கலம் என்னும் துறையாகும். இதுவும் உழிஞைத் திணையில் வரும் துறையாகும் மதிலைக் கைப்பற்றுதலே இதன் முதன்மை நோக்கம். அப்படி கைப்பற்றியதன் அடையாளமாக பகை மன்னனது மணிமுடிகளைக் கொண்டு வருவார்கள். இதற்கு மண்ணு மங்கலம் என்று பெயர்.  இதனைத் தொல்காப்பியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,

          ‘‘இகல்மதில் குடுமி கொண்ட மண்ணு மங்கலம்’’
(தொல் - பொருள். 69)
தொல்காப்பியரது இந்த இலக்கணப்படி சிறுபாணாற்றுப்படையில் வரும் பாடல் வருமாறு,


          ‘‘விரல்வேல் மன்னர் மன்னெயில் முருக்கி
          நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின்
          வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு’’    
             (சிறுபாணாற்றுப்படை. 247-249)
இப்பாடலில் பகை அரசனின் நிலைபெற்ற மதில்களை அழித்த நல்லியக் கோடனது வீரம் போற்றப்படுகிறது. இதேபோன்று பெரும்பாணாற்றுப்படையில் வரும் பாடல் வருமாறு,

          ‘‘புலவர் பூண்கட னாற்றிப் பகைவர்
          கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
          வென்றி யல்லது வினையுடம் படினும்’’  
(பெரும்பாணாற்றுப்படை. 450 -452)
இப்பாடலில் தொண்டைமான் இளந்திரையன் பகை அரசனது மதிலை அழித்து அவனது முடிகளைக் கைப்பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி மணிமுடிகளை சேர்ப்பது தனது வீரத்தின் அளவீடாகக் கருதப்பட்டது.

முடிவுரை

          இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயற்றுதல் என்பது வழக்கு. அதன்படி தொல்காப்பியர் தனக்கு முன்பு இருந்த இலக்கியங்களைக் கண்டு அதற்கேற்ப தனது இலக்கண நூலை இயற்றியுள்ளார்.  ஆனால் தொல்காப்பியருக்குப் பின்வந்த இலக்கியங்கள் தொல்காப்பியரது இலக்கணத்தைப் பின்பற்றியுள்ளன.  எனவே இலக்கியம், இலக்கணம் இரண்டுக்குமான பொருத்தப்பாடுகள் காலந்தோறும் இருந்து கொண்டுதான் இருக்கும். அதனை இவ்வாய்வு எடுத்துக் காட்டியது.

###

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

தனித்தமிழ் அறிஞர் த.சரவணத்தமிழன்





தனித்தமிழ் அறிஞர் த.சரவணத்தமிழன்



திருவாரூரில் இயற்றமிழ்ப் பயிற்றகம் என்ற அமைப்பினைத் தொடங்கி பல்வேறு புலவர்களையும், படைப்பாளிகளையும், உருவாக்கியவர்.

நல்ல தமிழோசை, இயற்றமிழ், அறிவுப் பாய்ச்சல் ஆகிய இதழ்களை  நடத்தியவர்.

இவரின் தமிணூல், தனித்தமிழ் நாவலரின் கனித்தமிழ்க் கட்டுரைகள், இருநூல் பிழிவு, பழமையிலே பூத்த புதுமை மலர், யாப்பு நூல் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன.

இதில் தமிணூல் 20ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப மரபான நூற்பா வடிவில் எழுத்து மற்றும் சொல்லிலக்கணம் பேசும் இலக்கண நூல்.

யாப்பு நூல் என்ற அவரது யாப்பிலக்கண நூல் திரைப்படப் பாடல்கள், புதுக்கவிதை ஆகியவற்றுக்கும் புதிய முறையில் இலக்கணம் கூறமுற்படும் சிறப்பிற்குரியது.

சொந்த ஊர் தஞ்சை மாவட்ட பாபநாசம் வட்டம், காந்தாவனம் கிராமம். (அடியார்க்குமங்களம்) இறுதி காலங்களில்  சென்னைத் தாம்பரம் அருகில் உள்ள கரிசங்கால் கிராமத்தில் பக்கவாதம் பாதித்த நிலையில் வாழ்ந்துவந்தார்.

தமிழாசிரியராக, தலைமையாசிரியராக பணி செய்து ஓய்வு பெற்றவர்.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் தொகுப்பாசிரியராக சில காலமும், தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்தபோது தமிழ் வளர்ச்சித்துறை குழுவில் இலக்கணப்பிரிவில் சில காலமும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

தமிழ் வளர்ச்சித்துறை குழுவில் இலக்கணப்பிரிவில் சில காலமும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தில் புலவர் பட்டம் பெற்றவர்.

திருவாரூரில் திரு.வி.க.வுக்கு சிலை வைக்க காரணமாக இருந்தவர்.

மேற்படி சிறப்புக்குரிய த.சரவணத்தமிழன்  26.08.2012  அன்று  இரவு 8  மணி அளவில் சென்னைப் போரூரில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவரது நினைவைப் போற்றி சென்னப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை  12.09.2012  அன்று நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது. அதன் காணொளி பதிவைக் கீழே காணலாம்.


  













இவரைப் பற்றி மேலும்...


சனி, 7 ஜூலை, 2012

வெந்து முளைத்த விதைகள்:


வெந்து முளைத்த விதைகள்: சுப்ரபாரதிமணியன்
======================================
(நாவல் குமாரகேசனின் ‘ கோட்டை பொம்மக்கா”  சிறுகதைத்தொகுதி குறித்த மதிப்புரை)

 

                                                                    கொங்கு நாட்டு வட்டார மொழிப்பிரயோகமும், வாழ்க்கையும் கவனிக்கத்தகுந்த அளவில் நாவல்குமாரகேசனின் படைப்புகளில் சமீபத்தில் வெளிப்பட்டிருப்பதால் அவரைக் கூர்ந்து கவனித்து வந்தேன். பெயரில் இருந்த விசித்திரத்தன்மையும் கூட. நாவல் என்பது பழமா, ஊரா, பெண்ணா என்று குழப்பம் தந்தது. குமாரகேசன் என்ற பெயர் குமரேசனிலிருந்து ஏதோ மருவி யிருப்பது தெரிந்தது. அத்ற்கெல்லாம் விளக்கம் அவரின் நூலில் இருக்கிறது. அதை வெகு தாமதமாகவே தெரிந்து கொண்டேன். அவர் கொங்கு நாட்டு ஆசாமி . கேரளாவில் தொழில் செய்கிறார் என்பதும், கொங்கு வட்டாரப் பிரயோகம்  தவிர இவரின் படைப்புகளில் குழந்தைகள் உலகமும், பிராணிகளின் உலகமும், தொன்மங்களின் மறு வாசிப்பும் கவனிக்கத்தக்கது.


                                                            குமரகேசனின் குழந்தைகள் பிராணிகளை மிகவும் நேசிக்கிறார்கள். மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் பெயர் இட்டு அழைக்கிறார்கள். சகமனிதனாய் நட்த்துகிறார்கள். அதனால்தான் அவர்களைக் காயடித்து, பின் சாமிக்கு பலியிடும் போது வாழ்க்கையின் விளிம்பிற்கே சென்று விடுகிறார்கள். தன் பக்கத்து நியாயமும், எதிர்ப்பும் எப்படியோ காட்டி ஓய்ந்து விடும் போது சுக்கு நூறாக உடைந்து போகிறார்கள். எறும்புகளைக்கூட அழுத்தமாய் தள்ளி விடும் இயல்பில்லாமல் மெதுவாக ஊதித் தள்ளி விடுகிறார்கள். மதிய உணவிற்காக விறகைச் சேமிக்க விறகு வெட்டப்போய் பாம்பு தீண்டி துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பள்ளிக்கல்வி மறுக்கப்பட்ட சாதாரண குழந்தைகளை ஈரத்துடன் காட்டுகிறார். பிராணிகளுக்கும் ஆன்மா இருப்பது போல அவைகள் மகிழ்ச்சி கொள்வதாய் எழுதப்பட்டுக்கும் வரிகள் அற்புதமானவை. கொளிஞ்சி விற்று வருகிற காசில் மசாலா வடை வாங்கித்தின்கிற ஆசை போல இவர்களின் ஆசைகள் மலிந்து கிடக்கின்றன.

                                                              அன்பும், மனித நேயமும் கிராம மக்களிடம்  வெகு சிறப்பாக வெளிப்படும் போது  இருக்கும் மனப்பகிர்தல்  விரிவாகச் சொல்லப்படுகிறது., அவர்களில் சிலர் ஏமாற்றுவர்களாக இருப்பது காட்டப்படுகிறது. ஏமாற்றுகிற கர்ப்பிணிப் பெண், சாமக்கோடாங்கியின் பின்னணியும் தெரிவதில்லை ஆனால் சங்கடப்படுத்துகிறது.மண்ணின் மனிதர்களான ஆதிவாசிகள் ஒவ்வொரு இடமாய் அலைக்கழிக்கப்படுகிற விசயமும் கூட. கடவுள்கள் கூட அவர்களைக் காப்பாற்றுவதில்லை. அவர்களே வெறுமனே கோபம் கொண்டு முகத்தைத்  திருப்பிக் கொள்கிறார்கள் . ஒரு பக்கம் சாயப்பட்டறைகள், இன்னொரு பக்கம் தோல் பதனிடும் தொழிற்சாலைகள். இவற்றுக்கிடையே இருந்து காலம் தள்ள முடியாத கடவுள்கள் தொலை தூரம் ஓடிப்போகிறார்கள். சாலை விஸ்தாரத்தில்  பிடறி தள்ளி ஓடிப்போகிறார்கள். நாத்திகத்திற்கு வலுசேர்க்கும் படிமங்கள்.இன்னொரு புறம் வரலாற்றை படிமமாக்குகிற  முயற்சியாக  கோட்டை பொம்மாக்கா போன்ற கதைகள் தென்படுகின்றன.  ஆடு மேய்க்கும் பெண் நரியையும் சகா போல் நேசிக்கிறாள். ஆனால் அந்த கர்ப்பிணிப் பெண்ணை நரி வயிற்றைக் கிழித்துப் போட்டு விடுகிறது.  மனிதர்களின் நம்பிக்கை துரோகங்கள் போல் பிராணிகளிடதிலும்  உள்ளது.பூர்வீக வீட்டில் கழுதைகளின் ஓலம் போல் சடங்குகளை  கிண்டல் செய்கிறவை புது வார்ப்புகள் ..கிராமங்கள் மாறாமல் இருக்கின்றன். வாகனங்களின் அபரிமிதமாக இயக்கம் அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறார்..கொங்கு மொழி வாயிலாக ஒரு கதை சொல்லியும், குழந்தை மனமும் சரியாக வெளிப்பட்டிருக்கிறது.இதில் வரும் சில கதைகளின் தர்க்க்குறைபாடுகளை இதன் முழு எதார்த்தமும், சொல்லும் மொழியும் மறைத்து விடுகிறது. கிராமிய வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையோடு இணைக்கும் கணிகள் இல்லாமல் இருக்கின்றன.

                                                               உலகம் விரிந்ததாய் எல்லோருக்குமான களமாய் இருக்கிறது. ஆனால் தங்களுக்கான வெளியும் இடமும் அற்றவர்களாய் போய் விடுகிற மனிதர்களை இவர் பெரும்பாலும் காட்டுகிறார். ஆடுமாடுகளை நேசிக்கும் சிறுவன்  அவனின் உலக்த்திலிருந்து துரத்தப்பட்டு கிணற்றில் விழ நேருகிறது, படிக்கப் போய் மதிய உணவு சமயலுக்காக  சிறுவர்கள் விறகுவெட்டிகளாகிறார்கள். மசால் வடை வாசனை பிடிக்க கொளுஞ்சி பிடுங்கப் போய் விடுகிறார்கள். தன் குடும்ப வாழ்க்கை மேம்பட வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் இழக்கும் பெண்ணும் தாய் வீட்டுற்குத் துரத்தப்படுகிறாள்.ஆதிவாசிகள் தங்களின் பூர்வீக நிலத்தை விட்டு துரத்தப்படுகிறார்கள். வேறு மாநில தமிழர்கள் துரத்தப்படவும் பல காரணங்கள் அமைந்து விடுகின்றன. ..தங்களுக்கான வெளியை இழந்து போய் நிற்பவர்களாக இருக்கிறார்கள்.
 
                                                                இவரின் பிரதேசம் பற்றி இவரே இப்படி சொல்கிறார்:” கொங்கு தேசத்தில் ஏகதேசமாக தென்கிழக்குப் பகுதிதான் நான் பிறந்த பூமி. விவசாயிகளில் இரண்டு ரகம் உண்டு. செழிப்பான ஆற்றுப் படுகைகளில் வ்யல்பரப்புகளுடன் வாழ்பவனும் விவசாயிதான். கள்ளிமரங்கூட பல்வற்றிக்கிடக்கு மேட்டாங்காடுகளில் காடுகரையுடன் காலந்தள்ளுபவனுன் விவசாயிதான். கண்ணுக்கெட்டும் தொலைவிற்கு குளமோ ஆறோ நீர் ஆதாரம் கொண்ட மலையோ தட்டுப்படாத பகுதிதான். ஆனி, ஆடியில் பனைமரம் கூட வாடி நிற்கும். பல பஞ்சத்திலும் சிறுகச்சிறுக உயர்ந்து வளர்ந்து சிறிதேனும் பசுமை கொண்டிருந்த பனை மரங்களும் குருத்து தொங்கி  காயந்து விழுந்தன. பனை மரங்கள் ஜீவமரணப் போராட்டதுடனே வழங்கிய பதனியும் நுங்கும் சேகாயும், பனம்பழமும், பனஞ்கிழங்கும் எமது மக்களின் பசியைப் போக்கியதை விட பட்டினியைப் பல நாட்கள் குறைத்தன. இது போக ஆடுமாடுகளுக்கு வேப்பிலையும், அரப்பிலையும், வேலாங்காயும் தழையும் வளர்ப்புத்தாயாக வழங்கிய  மரங்கள் கூட காலத்தின் கொடூரத்தால் எம்மை விட்டுப் பிரிந்தன. பலவற்றை வயிற்றுக்காகவே இழக்க வேண்டியிருந்த்து. கையை வெட்டி வித்துப் பிழைப்பது போலிருந்தது நிலைமை. கால ஓட்டத்தில் பஞ்சத்தின் கோரப்பிடியால் சோறு போட்ட ஆடு மாடுகளையும் காசிற்கு விறக் வேண்டியது வந்தது. ஒரே தலைமுறையில் முட்டிதூக்கிப் பஞ்சம், துவரைப் பஞ்சம், கோதுமைப்பஞ்சம் எனப் பல வறட்சியில் மக்கள் அலைக்கழிந்து போனார்கள். கூலிக்காரர்களும் பண்ணையக்காரர்களும் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புத்தேடி புலம் பெயர்ந்து புறப்பட வேண்டிய துர்நிலை ஏற்பட்டது. இளைய தலைமுறையினர்க்கு கல்வி கற்க வேண்டிய சமயத்தில் குடும்பத்ஹ்டைக் காப்பாற்ற புலம் பெயர்ந்து அடுத்த மண்ணிற்கு புறப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிறந்த பூமியென்று புலம்பிக் கொண்டிருந்தால் இடுப்புக் கோவணம் கூட மிஞ்சாது என்றதோர் நெருக்கடி. இதையெல்லம் மீறி என்ன நடந்தாலும் பிறந்த மண்ணிலேயே சாவோம் என்று வாழ்ந்து காட்டியவர்களின் வாழ்க்கைதான் இத்தொகுப்பில் இடம் பெற்ற அனேக கதைகள்.”

                                                                          எழுதிச் செல்லும்,  சொல்லும் விதத்தில் நுணுக்கமானப் பார்வை. சிறுகதைகளின் முரண்  வலிந்து இல்லாததாய் இயங்கிறது. ஜாதியக் குழுக்களும், முரணும், சங்கடங்களும் ஒளிவு மறைவின்றி சொல்லப்பட்டிருக்கிறது. இளம் பிராயத்தில்  மனதில் ஆழப்பதிந்து போன சுவடுகள்.கொங்கு மொழி படைப்பிலக்கியத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் சூழலில்  அதை நுணுக்கமாகவும் ஆழமாகவும் பயன்படுத்தும் லாவகம்.நாவல் குமரேசனிடமிருந்து  விரிவான நாவல் வடிவப்படைபடைப்புகளை எதிர்பார்க்க வைக்கிறது. கொங்கு கலாச்சார அம்சங்களில் ஆழமான ஈடுபாடு.மொழியின் லாகவம், மக்களை வாசிக்கிற அக்கறை இவையெல்லாம்  அந்நிய மாநிலத்தில், அந்நியப்பட்ட சூழலில் தன் வேர்களை அடையாளப்படுத்துகிற முயற்சியாக குமரகேசனின் எழுத்து வெளிப்பட்டிருக்கிறது. இது இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகும்.

###


கோட்டை பொம்மக்கா -சிறுகதைத்தொகுதி- நாவல்குமாரகேசன் - வெளியீடு: அன்னை ராஜராஜேஸ்வரிர் பதிப்பகம், சென்னை 11- விலை:ரூ 80/  - பக்: 128.
------------------------------------------------------------------------------------------------------------
நாவல்குமாரகேசனின் தொடர்பு முகவரி:

நாவல் குமாரகேசன், நாவலூற்று, கோடாங்கிபட்டி (அஞ்சல்), வேடசந்தூர் (வழி), திண்டுக்கல் மாவட்டம் – 624 710.
NAVAL KUMARAGESAN, THIRUMALA BHAVAN, KOTHAMANGALAM, KOYILANDY (P.O.),  KOZHIKODE,  KERALA – 673 305.    CELL : 09846889258
( இக்கட்டுரை உயிர் எழுத்து - ஜூலை இதழில் வெளியாகியுள்ளது.) நன்றி! உயிர் எழுத்து.

இந்த நூல் வெளியீட்டுப் பதிவுகளைக் காண கீழே சொடுக்குங்கள்.
http://kurinjivattam.blog.com/2012/05/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/

சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு


அப்பனின் கைகளால் அடிப்பவன் :
சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு
·###    
யாழன்  ஆதி

அதியனும் யாழன்ஆதியும்
               அதியனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. முதல் தொகுப்பில் காதல் கவிதைகளைத் தந்தவர் இந்தத் தொகுப்பில் எதார்த்த வாழ்வின் இருட்பிரதேசங்களில் தான் கண்ட உண்மைகளைக் கவிதைகளாக்கி உள்ளார்.

              இந்தகையக் கவிதைகள் சமூகத்தால் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன என்பது  ஒரு கேள்வி. இந்தக் கேள்விக்கு இரண்டு தரப்பார் பதிலாற்ற வேண்டியுள்ளது. ஒன்று பொதுச் சமூகம் இந்தக் கேள்வியை எப்படி எதிர்கொள்கிறது என்பது. அதாவது பொதுப் புத்தி சமூகம் அல்லது சாதிய மேலாண்மைச் சமூகம் இந்தக் கவிதைகளை எப்படிப் பார்க்கிறது? சாதிய இந்து மனோநிலை உள்ள பிற எழுத்தாளர்கள் இத்தகைய கவிதைகளைக் குறித்து பேசுவதில்லை. அதன் காரணமும் மிக எளிது.  அவர்கள் இந்தக் கவிதைகளை வாசிப்பதில்லை. கணையாழியின் கடைசிபக்கங்களில் பேசப்படுவதற்கோ வெங்கட்சாமிநாதன் போன்றோரின் பார்வை இவற்றின் மேல் படுவதற்கோ  எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் நவீனக் கவிதைகளின் தோற்றம் நிகழ்ந்த காலங்களில்  இவர்களின் இலக்கிய செயல்பாடு எப்படி இருந்தது. இப்போது ஏன் அவர்கள் அப்படி செயல்படவில்லை. ஒருவேளை வயது காரணமாக இருக்குமோ என்றால் அதுவும் இல்லைதான். இந்தக் கவிதைகள் ஒதுக்கப்படுவதற்கு சாதிய மனநிலைதான் காரணம். அத்தகு சாதிய மனநிலை அறிவுலகத்திலும் இருப்பதால் இந்த அறிவு ஒதுக்கல் நடைபெறுகிறது.

              இது அதியனுக்கு மட்டும் நிகழ்கிற ஒன்றுஅல்ல. அம்பேத்கருக்கே இதுதான் நிலை. மிகப்பெரிய சமூகவிடுதலைக் காரராக அவர் இருந்தாலும் அவரின் எழுத்துகள் எல்லாம் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் வைத்து ஆராயப்படவேண்டிய ஒன்று. பொருளாதாரத் துறையாகிலும் இலக்கிய துறையானாலும், அரசியல் துறையானாலும், சட்டமானாலும், சமூகவியலானாலும், மானுடவியலானாலும், சமயமானாலும் எந்தத் துறையெனினும் அம்பேத்கரின் பணிகளைக் குறித்த கொண்டாட்டம் யாரிடம் இருக்கிறது? எந்த உயர் சமூகத்தினராயினும் அவர்கள் அம்பேத்கரின் அறிவை ஏற்பதில்லை.  தன் வாழ்நாளில் ஒரு லட்சம் பக்கங்களை எழுதியவர் அம்பேத்கர். அறுபதாயிரம் பக்கங்களை எழுதியவர் காரல் மார்க்ஸ். இருவரும் மானுடவிடுதலைக்காகவே வாழ்ந்தனர். அவர் பொருளாதார அடிப்படையில் சமூகத்தைக் கண்ணோக்கினார். இவர் சமூக  அமைப்பின் அடிப்படையில் விடுதலையைக் குறித்துப் பேசினார். அவரவர் வாழ்வுச்சூழல் அப்படி. ஆனால் இருவருக்கும் ஒன்றுதான் குறிக்கோள், மக்கள் விடுதலை. ஆனால் ஒருவர் உலகத்தலைவர். இன்னொருவர் சேரித்தலைவர். ஊர் என்னும் அமைப்பில் இருக்கும் படித்தவர்கள் கூட  அம்பேத்கர் அவர்களின் பணிகளைக் குறித்த அங்கீகாரத்தை வழங்க தற்போதும் அவர்கள் தயாரில்லை.

            பொதுச் சமூகத்தின் மனசாட்சியை நோக்கி ஆதவன் தீட்சண்யாவின் குரலில் இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது. சுவரின் இந்தப்பக்கம்நின்று கைகளை நீட்டி  கைகளைக் கொடுங்கள் என்று கேட்கிறேன். அந்தப் பக்கம் மனிதர்கள் யாரும் இல்லையா? மனிதர்கள் அற்ற ஒரு சமூக அமைப்பில்தான் விளிம்புநிலை மக்கள்  தங்கள் துயர்களை சொல்லி சொல்லி மாய்கிறார்களா? அதியனின் கவிதைகளும் அப்படித்தான் தன் குரலை உயர்த்துகிறதா?.

             அதியனின் தாத்தாவும் அவருடைய வாழ்வும் இந்தத் தொகுப்பில் தலித் வாழ்வின் பிரதிநிதிகளாகின்றனர். தலித்துகளின் எத்தகைய வாழ்வும் போராட்டத்திற்குரியதாகவும்  விடுதலைக்கானதாகவும் அல்லது எப்போதும் எதிர்ப்பதற்கானதாகவும்  மட்டுமே இருக்கிறது. வாழ்க்கை  வாழ்வதற்கே என்னும் கோட்பாட்டின்மீது இருக்கும் நம்பிக்கைகளைத் தகர்த்து விளிம்புநிலை மக்களுக்கு வாழ்க்கை போராடுவதற்கே என்று பதிகிறது இத்தொகுப்பு.

             இந்துத்துவ பெருந்தெய்வ வழிபாடு என்பது இன்னும் சாதிய அமைப்பைக் காக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் சாதி அமைப்பின் ஆணிவேராக இந்து மதம் கட்டமைக்கிற சடங்குகளைத் தாண்டியது சிறு தெய்வ வழிபாடு. திருப்பதியில் மாடு வெட்டி கூழ் ஊற்ற முடியுமா? சிவன் கோயிலில் கண்ணப்பன் கதையைத் தவிர வேறெதுவும் நடக்கமுடியுமா? எனவே பெரும்பான்மை இந்து ஆதிக்க மனநிலைக்கெதிராக தங்கள் வாழ்வைக் கட்டமைக்கிறார்கள் தலித்துகள். மாடு, பன்றி வெட்டி கூழுற்றி மாரியாத்தாவிற்கு படைத்து சாப்பிட்டு தன் கொண்டாட்டங்களை நாட்டார் வாழ்வியலாக மாற்றுகின்றனர். ஆனால் மாறாக இந்துத்துவம் மதுரைவீரனை, நந்தனை தன் சாதிய சடங்கிற்குள் அடக்கிக் கொள்ள கட்டுக்கதைகளை ஏவுகிறது. அதியன் தன் கதையை இங்கே பேசுகிறார்

சாராயம்/கருவாடு/சுருட்டு/
ஆடு/மாடு/பன்னி/கோழியென பலியிட்டு/
இன்று என்னைப் போலவே நீயும் வணங்குகிறாய்/
என் பாட்டன்களான /
மதுரைவீரன்/இருச்சி/காத்தவராயன்/நந்தன் என/
அன்று/ உன் பாட்டனுக்கெதிராய் /
அடங்க மறுத்து/அத்துமீறியதால்/பழிவாங்கப்பட்டவர்கள்/
இன்று/சாமிகளானார்கள்/

இன்று/கழுத்தறுந்தும்/மலம் தின்னும்/உன்னோடு சண்டையிடும்/
நாங்கள் யார் தெரியுமா? உன் பிள்ளைகளின் சாமிகள்.

போராட்டத்தின் வெற்றியை இப்படியும் சொல்லலாம்தான். ஆனால் கடந்த கால வரலாறுகளின்மேல் நின்று பார்க்கையில் இதுதான் உண்மையானதாகவும் இருக்கிறது.

              மூன்றுபேர் இருக்கை ஒன்று அய்ந்துபேர் இருக்கையாய் பயணத்தின் கடைசிவரை வாழ்ந்துவிட்டுப் போனது என்று ஒரு படிமக் கவிதை இத்தொகுப்பில் உண்டு. தனக்கான தாங்கும் சக்தியைத் தாண்டி அதிகமான பளுவையும் தன் வாழ்நாளில் சுமக்கும்  தலித்துகளின் குறியீடாக அந்தத் தொடர்வண்டியின் இருக்கை இருக்கிறது என்பது எத்தகைய எதார்த்தம்.

சேரிக்கு வெளியே/கோணல்/மாணலாய்/
சேரிக்குள் வரமறுத்த/கிராமத்துச் சாலைகள்  
இந்தக் கவிதை நவீனமயமாக்கலில் இருக்கும் சாதீயத்தை நோக்கி தன்  கல்லை எறிகிறது. அது மட்டுமல்ல நகரங்களில் இருக்கும் சாலைகள் நேர்நேராக இருக்க  கிராமத்தில் இருக்கும் சாலைகள் ஏன் கோணல் மாணலாய் இருக்கின்றன? கிராமங்கள் சாதியின் இருண்ட கூடங்கள் என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுகிறார். அப்படியானால் சாதி இந்துக்களின் நிலங்களில் ஊடாக  நேராக வரமுடியாத சாலைகள் சேரிக்குள் வருவதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டு வளைந்து வளைந்து வரவேண்டியிருக்கிறது.

                   போர்களற்ற உலகத்தினைதான்  ஒரு ஆக்கவாளி எப்போதும் எதிர்ப்பார்ப்பார். ஆனால் உலகில்  எந்த மூலையிலாவது போர் நடந்துகொண்டுதான்  இருக்கிறது. அது வான் வழியாகவும் இருக்கலாம், தரைவழியாகவும் இருக்கலாம், நீர் வழியாகவும் இருக்கலாம். இந்தப் போர்கள் ஒரு நேரத்தில் முடிந்துவிடலாம்.இவை எல்லாவற்றையும் விட முடியாத போராய் சாதிப்போர் இருக்கிறது அது சுடுகாட்டிற்கான வழிக்காக இருக்கிறது என்னும் கவிதை தலித் போரின் தீவிரத்தைக் காட்டுகிறது.

                    சில கவிதைகளில் அதியன்  காட்டுகின்ற கிராமத்து காட்சிகள் எல்லாம் மனதைக் கவ்வுகிற காட்சிகள். ஒரு தேர்ந்த திரைக்காரனுக்கு நிகரானக் காட்சிகள் அவை அவரின் வாழ்வின்மீதானப் பற்றினை அவர் கொண்டிருக்கும் அன்பினைக் காட்டுகிறது.

                    சென்னையில் இருக்கும் அவருக்கும் கிராமத்தில் இருக்கும் அவர் பையனுக்குமான உறவு நிலைகளை அவர்  கவிதைகளில் வாசிக்கிறபோது ஒரு  கவிதைக்காரன்  தன் குடும்பத்திற்காய் உழைக்கும்போது அவன்  உறவுகளை விடுத்து தூர இருக்கும்போது என்ன விதமான மனோநிலையை உருவாக்கும் என்பதை உணரமுடிகிறது.

                     குறிப்பால் சாதியை அறிதல் என்பது இப்போதைய  சூட்சுமம். அதை ஒரு கவிதையில்  போட்டு உடைப்பார் அதியன். மொழியின் சிக்கனத்தோடு  பெரும் வரலாற்றைச் சொல்ல அவருக்கு கவிதை கைக்கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அப்போ நீ என நீளும்/ அவன் ஆய்விற்கு முற்றுப்புள்ளியாய்/பறச்சேரி யென்றேன்/ என முடிக்கையில் அவன் ஆராய்ச்சி  எதைத் தேடுகிறது என்பதை உணர்ந்த ஒரு போர்க்குரல் கேட்கிறது. இதனோடு தொடர்புடைய இன்னொரு கவிதை நகர் சார்ந்த வாழ்க்கையில் ஒரு தலித்தின் அச்சம் பதிவாக்கப்பட்டுள்ளது. அண்டை வீட்டுக்காரர்கள் சரியாகப் பேசவில்லையெனில்  உடனே மனத்திற்குள் எழும் அச்சம் அது கண்டுபிடித்துவிட்டார்களோ என்பது. குடியிருப்புகளில் வாழும் தலித்துகள் மாட்டுக்கறி வாங்கி வந்து சுதந்திரமாய் சமைக்கமுடியாது. அதன் வாசம் வெளியே வந்துவிடும் என்பதால் கதவு ஜன்னல்களை எல்லாம் மூடிவிட்டு சமைப்பார்கள் சாப்பிடுவார்கள். இத்தகைய அச்ச வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கிறது?

                     உரிமைகளுக்காய் போரிட்ட தாத்தனும் மாமனும் சந்தித்துக்கொள்ளும் ஒரு கவிதை யில் இப்பல்லாம் நம்ம மக்க கொளத்துல இறங்குறாங்க ஆனா கொளத்துலதான் தண்ணியே இல்லையே என்று சொல்கிறபோது சிரிப்புடன் அழுகையும் சேர்ந்தேதான் வருகிறது.   இரட்டைக்குவளை முறையை ஒழித்தோம். இப்போது எல்லாரும் தேநீர் குடிக்க  ஒரேமுறை பயன்படுத்தும்  ஞெகிழிக் குடுவைகளைப் பயன்படுத்துகிறார்கள். நவீன தீண்டாமை.

                      இப்படி எல்லாக் கவிதைகளையும் வாழ்வின் அடையாளத்தையும், அரசியலையும் பேசக்கூடிய கவிதைகளாகக் கொண்டு அதியனின் தொகுப்பு மிளிர்கிறது. கடந்த ஆண்டுகளில் தலித் இலக்கியம் தேவையில்லை எனப் பேசுபவர்களின் பட்டியல் நீள்கிறது. அதேபோல் தலித் இலக்கியம் தற்போது நீர்த்துப்போய்விட்டது எனவும் சொல்கிறார்கள். இதனால் பல தலித் எழுத்தாளர்கள் பொது அடையாளங்களை நோக்கி நகர்கிறார்கள். இச்சூழலில் நம்பிக்கைத் தரக்கூடிய ஒரு கீற்றாக  இன்னும்  எழுதப்படாத எத்தனையோ வாழ்க்கை அப்படியே இருக்கிறது  எனச் சாட்டையைச் சொடுக்கும் வீரியத்துடன் வந்திருக்கும் ஒரே தொகுப்பு  அதியனின் அப்பனின் கைக்களால் அடிப்பவன்.

# #
அப்பனின் கைகளால் அடிப்பவன் – கவிதைத்தொகுப்பு – அதியன் – வெளியீடு: நறுமுகை, 29/35 தேசூர் பாட்டை, செஞ்சி – 604 202. 94861 50013. – விலை: 60 – பக்.80.
அதியனின் அலைபேசி எண்: 99401 61184.

###

 ( இக்கட்டுரை குமுதம் தீராநதி - ஜூலை இதழில் வெளியாகியுள்ளது.பக்:49-50) 
நன்றி! தீராநதி.

ஞாயிறு, 13 மே, 2012

பாடகர் செந்தில் வேலன்



பாடகர் செந்தில் வேலன் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - அருண் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார்.

அண்மையில் களவாணி படத்தில் பிரளயன் எழுதிய நாடகப்பாடல் ஒன்றைப் பாடியிருந்தார் (இந்த பாடலைக் கேட்க அருகே உள்ள லிங்கைச் சொடுக்குக) http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGSKU0009'&lang=ta

10 ஆண்டுகளுக்கும் மேலாக த.மு.எ.க.ச மேடைகளில் வைகறை கலைக்குழுவினரோடும், தனியாகவும் பாடிவருகிறார். இவர், தமிழ் திரையுலகம் இன்னும் பயன்படுத்தவேண்டிய சிறந்த ஆளுமை.

06.05.2012 அன்று நறுமுகை சார்பில் செஞ்சியில் நடைபெற்ற நாவல் குமாரகேசனின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் அவர் நான்கு பாடல்கள் பாடி அனைவரையும் கவ்ர்ந்தார்.

அவரைச் சிறப்பிக்கும் விதமாக அப்பதிவை இங்கே பதிவு செய்கிறேன். 
( அவருடன் தொடர்புகொள்ள... 9442311491 )

1.அழுகுரல் சத்தம்...


http://www.youtube.com/watch?v=ETpdeJe96so
2.ஆடல் பாடல் பேச்சில் எல்லாம்...


3. எனக்கெனவே ஒருத்தியவ....

இப்பாடலை எழுதியவர் : பேரா. முனைவர் வே. நெடுஞ்செழியன், திருவண்ணாமலை.
( குறிப்பு: விரைவில் பேராசிரியரின் பாடல்கள் ஒலிப்பேழையாக வெளிவர இருக்கிறது. )



4. மல்லுவேட்டிக் கட்டிக்கிட்டு...
.