சனி, 26 ஜனவரி, 2013

கலக குரலாக தெறிக்கும் ஆலா கவிதைகள்!

கலக குரலாக தெறிக்கும் ஆலா கவிதைகள்! - ஓர் எளிய அறிமுகம்

: ஜெ.ரா

---------------------------------------------------------------------------

ஆலா


          இதுதான் முதல் எனச் சொல்லமுடியாததாய் காலம் காலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது தமிழ்க்கவிதை நதி. எத்தனையோ பொருண்மைகள்; எத்தனையோ கவிதைகள்; எத்தனையோ கவிஞர்கள்; எல்லாரும் விழுங்கி வளர்ந்து கொண்டே இருக்கிறது தமிழ்க்கவிதை உலகம்.
            “கவிதை இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்பது ஓர் அடிப்படையான உண்மை கற்பனையும், அழகுணர்வும், நாடகப்பண்பும், கதை சொல்வதும், உணர்ச்சி ஏற்றத்தாழ்வோடு பேசுவதும், இசைநயமும், வரலாற்றுக்குள் வந்த மனிதனிடமிருந்து பிரிக்க இயலாத பண்புகள். மனிதன் என்றைக்கும் சமூக உயிரி என்ற முறையில் அறஉணர்வு முதலிய பண்புகளைக் கொண்டவன். கடந்த கால நினைவுகளை ஒரு பார்வையில் எழுதிக்கொள்பவன் மனிதன். (ஞானி, கவிதையிலிருந்து மெய்யியலுக்கு, பக்.171)
            “தான் அனுபவித்த துயரங்களை இன்னொரு கட்டத்தில் இன்பமாகிப் பார்க்கத் தெரிந்தவன் மனிதன். இந்த வகையில்தான் தனக்குள் எப்பொழுதும் ஓர் கலைஞனை/கவிஞனைக் கொண்டிருக்கிறான் என்று சொல்ல முடியும். கவிதையியல் என்பது குறித்துப் பேசும் பொழுது இந்த அடிப்படை உண்மைதான் நம் கவனத்தில் முதன்மையாய் வரவேண்டும். (ஞானி, கவிதையிலிருந்து மெய்யியலுக்கு, பக்.171)
            இந்த கலைமனம்தான் தமிழ் நெடும்பரப்பில் மிக நெடிய வரலாற்றை கவிதைக்கு உருவாக்கி வைத்திருக்கிறது.
            காலந்தோறும் கவிதை ஓடிவந்தாலும் அது, பழையதாகவே நின்றுவிடாது சமகால செய்திகளைச் சொல்வதற்கு தன் வடிவங்களையும் மாற்றி வந்துள்ளது.
            -பட்டாக,
            -கலிப்பா, பரிப்பா, வஞ்சிப்பாவாக
            -பின்பு ஆசிரியப்பா, வெண்பாவாகபா இனங்களாக
            -பின்பு சந்தம், வண்ணம், கும்மி,
           -கண்ணிகளாக
            -பிறகு கீர்த்தணை, சிந்து
என பல்வேறு இசைவடிவங்களாக காலந்தோறும் கவிதை வளர்ந்து விரிந்துள்ளது. அந்த வகையில் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதுக்கவிதை முக்கியமானது.
              “புதுக்கவிதை இன்றைய தமிழனின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு புது அம்சத்தை முதன் முதலாகச் சொன்ன இலக்கிய வடிவமாகும். அந்த வகையில் புக்கவிதை வெறும் வடிவ ரீதியாக மட்டுமின்றி உள்ளடக்க ரீதியாகவும் நவீனயுகத்தில் நெருக்கடிமிக்க வாழ்க்கையை வாழும் தமிழனைக் காட்டுகிறது (தமிழவன், இருபதில் நவீனதமிழ் விமர்சனங்கள், பக்.50)
            வானம் பாடி கவிதை இயக்கத்திற்கு பிறகு தமிழ்ச் சூழலில் 1980களில் சீரிய சமூகஎதார்த்த, விமர்சனஎதார்த்த புதுக்கவிதைகள் பலவும் தோன்றி தமிழ் கவியுலகை செழுமைபடுத்தின. இந்த நேரத்தில்தான் ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூவும், அதன் துணை, இணை வகைகளும் அறிமுகமாயின.
              “தமிழில் மரபு மீறல் எப்படி புதுக்கவிதைக்கு அடித்தளமிட்டதோ, அதே போத்தான் ஜப்பான் மண்ணில் ஏற்பட்ட புதிய கவிதை தாகமே ஹைக்கூ கவிதைகள் வேர்விட்ட காரணமாயிற்று.” (மு.முருகேஷ், கிண்ணம் நிறைய ஹைக்கூ, பக்.03)
                           “ஹைக்கூ ஒரு சுகமான அனுபவம்தான். முதலிரண்டு வரிகளில் ஒரு எதிர்பார்ப்பையும், மூன்றாம் வரியில் ஒரு இன்ப அதிர்ச்சியையும் பீறிடச் செய்யும் நல்ல ஹைக்கூ (நெல்லை.சு.முத்து, புத்தாயிரம் தமிழ் ஹைக்கூ, பக்.09)
            இந்த ஹைக்கூ வடிவம் தமிழில் சோதனை முயற்சியாக 1916-1970 களில் அறிமுகமாகி - 1970-1994 இல் பூக்கத்தொடங்கி, 1994-2003 வாக்கில் வளர்ச்சியைக்கண்டது.4 கிட்டத்தட்ட 140க்கும் மேற்பட்ட நூல்கள் தோன்றி பெரு எழுச்சியைப் பெற்றுவிட்டது. (நெல்லை.சு.முத்து, புத்தாயிரம் தமிழ் ஹைக்கூ, பக்.03.) இந்த ஹைக்கூ எழுச்சி காலகட்டத்தில்தான் ஒரு ஹைக்கூ எழுத்தாளராக அறிமுகமானார் ஆலா. அவர் குறித்தும், அவரது கவிதை  படைப்புகள் குறித்தும் அறிமுக அளவில் ஆராய்கிறது இக்கட்டுரை.

ஆலாவின் பன்முக ஆளுமை
          புதுச்சேரியைச் சேர்ந்த ஆய்வியல் நிறைஞரான ஆலாவின் இயற்பெயர் இரா.முனுசாமி. தனியார் தொழிற்சாலையில் வேலைசெய்து கொண்டே நாடகம், இயக்கம், கவிதை, கதை, சிலம்பம் என பன்முகம் காட்டும் ஆலா இயல்பு கருத்துக்களாலும், கொள்கைகளாலும் முறுக்கேரிய உண்மைப்படைப்பாளி.
            “ஏதாவது செய்யவேண்டும் என்கிற மேம் போக்கான செயலாக இல்லாமல், எதையும் திட்டமிட்டு தெளிவாய், உறுதியாய் சமூக பயன்பாடும், மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு செய்கிற ஆலா தனித்துவமாய் இயங்குகிற ஒரு படைப்பாளி. எழுத்தோடு நில்லாமல் நாடகம் எழுதி நடிப்பதோடு, சிலம்பம், தீப்பந்தாட்டம் என நம் மண்ணின் கலைகளிலும் தேர்ச்சிமிக்க கலைஞன் ஆலா. (மு.முருகேஷ், நறுமுகை-13, பக்.38)
            “எல்லோரும் எழுதுகிறார்களே என்பதற்காய் தானும் எழுதாமல், எழுதுவதில் ஒரு நோக்கம் இருக்கவேண்டும் என்பதை புரிந்துக்கொண்டு எழுதிவரும் ஆலா, எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத அசல் மனிதன். அதனாலேயே சுற்றி வளைக்காமல் கண்ணில் படுகிற சமூகத்தை அஞ்சாமல் அப்படியே தன் கவிதைக்குள் கொண்டுவந்து காட்டுகிறார். (மு.முருகேஷ், நறுமுகை-13, பக்.39)
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கைக்காக அன்றாடம் போராடுவதோடு, ஒட்டுமொத்த சமூக பிரச்சனைகளையும் கண்டு பொறுக்காது  கலைவடிவமாக மாற்றும் கவிஞர் தன்னையே ஒரு குறியீடாக உடைய பறவையைத் தனது கடல்சார்ந்த சூழலுக்கும், இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழும் தமிழர் அடையாளத்திற்கும் வெளிப்பாடாக தமது பெயரை தேர்வு செய்துள்ளார்.
      “ஆலா-
                         இது ஒல்லியான, அழகிய
                         வெள்ளிபோல் வெளுத்த பறவை.
                         கடற்கரை ஓரங்களில்,
                         கூர்மையான சிறகை இடித்து
                         அங்குமிங்குமாகத் திரியும்.
                       
                         அப்பொழுது அதன் அலகும்,
                         கண்ணும் கூர்ந்து
                         கீழ் நோக்கி இருக்கும்.
                       
                         இருந்தாற்போலிருந்து திடீரெனச்
                         சாய்வாகக் கீழே பறந்து
                         இரையைக் கவ்விக் கொண்டு
                         மேலேழுப்பும்.

                         வாழ்க்கையில் அதிக நேரம்
                         இவை பறந்தே செலவு செய்யும்.

 (உயிர்வேலி தொகுப்பின் பின் அட்டையில் ஆலா எழுதிய வரிகள்)

தப்புக் கதிராய் கிடைத்த தமிழ்க்கதிர்
          ‘கலை கலைக்காகவேஎன்று ஒரு கூட்டம் மனித வாழ்வுக்கு அப்பாற்பட்டு போய்க்கொண்டிருக்கிறது. பணம் பண்ணுவதே குறியாய் கண்டதையும் எழுதி பண்பாட்டையையும், மொழியையும் சீரழிக்கிறது ஒரு கூட்டம். புரியாத மொழியில் எழுதி தமது மேதாவி தனங்களை நிறுவி மகிழ்கின்றன ஒரு கூட்டம். கவிதையாய் கண்டதையும் உளரிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இப்படியான பல்வேறு அவலமான சூழலிலும் சமூகத்தை சிந்திக்கும், உணர்வுள்ள ஒரு முற்போக்கு படைப்பாளியாக ஆலா விளங்குகிறார்.
நல்ல தமிழில் படைப்புகள் எழுதப்படல் வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் அவர். சாதிகளற்ற தமிழ்ச் சமூகம் மலர வேண்டும் என்கிற கனவுகளைக் கொண்டவர். கவிதையை ஓர் இயக்கமாக வளர்க்க ஆசைப்படுகிறவர். அதனால், அவரே ஓர் இயக்கமாக இருந்து ஹைக்கூ முதலான நவீனக் கவிதை வடிவங்களில் எழுதி வருகின்றார்   ( பாரதிவசந்தன், கமுக்கம், பக்.12)
            “தமிழ்மானமும், தாய்மண் பற்றும், தமிழினவுணர்வும், விரிந்த நெஞ்சமும், தொலைநோக்குப் பார்வையும், தெளிந்த சிந்தனையும், அறிவை உள்வாங்கும் ஆற்றலும், ஓயாதுழைக்கும் சுறுசுறுப்பும், ஏழ்மையில் நேர்மையும், முடித்துக் காட்டும் துணிவும், அன்பான பண்பும், பணிவும், பகுத்தறிவு நிமிர்வும், பல்கலைத்திறனும், பெற்றுயர்ந்த திறனாளி, நல்ல படைப்பாளி, சிறந்த பாட்டாளி, தோழமைக்குக் கூட்டாளி, பகைத்த வேட்டாளி, தமிழ் நாட்டாளி (புதுவை தமிழ்நெஞ்சன், கமுக்கம், பக்.106)
என்று புதுவை தமிழ்நெஞ்சனால் அடுக்கப்படும் சிறப்புக்குரிய ஆலா அவர்களின் கவிதை தொகுப்புகள் இதுவரை மூன்று வெளிவந்துள்ளன.
                        1. உயிர்வேலி           - 2001 (ஹைக்கூ தொகுப்பு)
                        2. கமுக்கம்                 - 2003 (புதுக்கவிதை தொகுப்பு)
                        3. திமுரு                     - 2004 (சென்ரியு தொகுப்பு)
            இம்முன்று தொகுதிகளையும் ஆலாவே தமது நெய்தல்பதிப்பகத்தின் மூலம் தாமே வெளியிட்டுள்ளார்.
            ஒவ்வொரு தொகுதியும் கட்டமைப்பு ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுவன. அவற்றையெல்லாம் தனித்தனியே இனி, ஆராய்கிறது இவ்வியல்.



    1.   உயிர்வேலி
            பல்வேறு புகைப்பட கவிதைகளுக்கு மத்தியில் 142 ஹைக்கூ கவிதைகள் கொண்ட உயிர்வேலிஆலாவின் முதல் தொகுப்பு.
                        “நான் பணிபுரியும் புரோட்கெம்    தொழிற்சாலையில்
                        வேலையின் போது
                        ‘நைட்ரிக் அமிலம்பட்டு
                        நிர்வாகத்தினாலும், மருத்துவர்களாலும் 
                        கவனிக்கத் தவறி வாழ்விழந்த
                        தெ.பன்னீர் செல்வம்
                      உடன் பாதிகக்கப்பட்ட
                        ஸ்ரீ.பாலாஜி ஆகிய தோழர்களுக்கும்....
                        இந்த மண்ணில் இன்னும்
                        இவ்வாறான நேர்ச்சியில் பாதிக்கப்பட்ட,
                        அனைத்து தொழிலாளர்களுக்கும்என நூலை படைக்கும் ஆலாவின் தொடக்கமே அவரது மனிதநேயத்தையும், சமூக உணர்வையும் வெளிப்படுத்துகின்றது.

            எதிர்கார்ப்புக்கு ஏற்ப, உலகமயமாதலுக்கு எதிரான குரல்களை பலவிதங்களிலும் ஹைக்கூவாக பதிவு செய்திருக்கிறார் ஆலா. பெண்ணியம், தலித்தியம், பகுத்தறிவு, சுற்றுச்சூழலியம் என்று ஹைக்கூவில் சாத்தியமாகும் முனையைத் தாண்டியும் சமூக செய்திகளை, செய்தியாகவும், கவிதையாகவும் பரிமாறியுள்ளார் இத்தொகுப்பில்.
            “சமுதாய மேம்பாட்டுக்கான கருத்துக்கள் மட்டுமே கவிதைகளாகிவிடாது. இவை செய்யுள் வடிவத்தில் இருந்தாலும் புதுக்கவிதை வடிவத்திலிருந்தாலும் கவிதையாகாது. இத்தகைய கவிதைகளுக்கான சமூகத்தேவைகள் எப்போதுமே உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் மேலான கவிதை காலத்தையும் புறம்தள்ளி என்றும் புதுமையாக நிற்பது (ராஜமார்த்தாண்டன், புதுக்கவிதைவரலாறு, பக்.90)  
என்கிற படைப்பு தூய்மைவாதிகளின் கருத்துக்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு மனதுக்குட்பட்டதை, சொல்லவேண்டும் என்று எண்ணியதை எல்லாம் கவிதையாக்கியிருக்கிறார் ஆலா.
ஆலா.... இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்ததற்கான அடையாளங்களோடு அழகழகான ஹைக்கூக்களைத் தந்திருக்கிறார் (அறிவுமதி, உயிர்வேலி, பக்.6)
என பாராட்டும் அறிவுமதியின் கூற்றுக்கு இனங்கவும், தமிழுணர்வு மேலிடவும் ஆலா, இந்நூலை தனித்தமிழில் தரமுயற்சித்துள்ளார். அவ்வாறு பயன்படுத்திய தனித்தமிழ் சொற்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள அயற்சொல்லையும் குறிப்பிட்டு நூலின் இறுதியில் ப.அருளியின் அயற்சொல் அகராதியிலிருந்து எடுத்து வழங்கியுள்ளார். (ஆலா, உயிர்வேலி, பக்.99)
                   “தலையாட்டி முறைக்கும்
                        ஓணான்
                        கல்லால் அடித்தும்”             (உயிர்.37)
இப்படி, இயற்கையைக் காட்சிப்படுத்தும் போதும் ஒரே ஒரு கருத்தை உணர்த்திவிடுகின்றன, ஆலா கவிதைகள்.
                        “பனை மரத்தைப்
                        படம் பிடித்தது
                        பனித்துளி”                             (உயிர்.60)
                        “படிக்கும் முன்
                        முகர்ந்திடுவேன்
                        புதுப்புத்தகம்”                        (உயிர்.38)


2.   கமுக்கம்
          காதல்தொகைஎன்ற அறிவிப்புடன் கமுக்கம்என்ற ஆலாவின் கவிதை தொகுப்பில், 184 புதுக்கவிதைகள் இடம் பெற்றுள்ள, அத்தனையும் காதல் கவிதைகளாக அமைந்துள்ளன.
            “இந்த நூலில் நல்ல அருமையான வார்த்தைப் பிரயோகம், பொய் கலவாத கற்பனை, நிஜமான நேசம் என்று நிறைய இடங்களில் இவருடைய காதல் கொடி கம்பீரமாய்ப் பறக்கிறது. தமிழ்மண் சார்ந்த பண்பாட்டு அடையாளங்களுடன் ஒப்பனைகள் இன்றி எழுத ஆலாவால் முடிந்திருக்கிறது என்பதைக் கவிதைகளைப் படிக்கிறபோதே உணர்ந்துகொள்ள முடிகிறது. (பாரதிவசந்தன், உயிர்வேலி, பக்.13)
            “பெண்ணின் உறுப்பெழிலை வண்ணனை செய்தும், புகழ்ந்தும் எச்சில் உறுவதைவிட்டு, அழகுப் பதுமையாய் அவளுக்கு அணி, மணி புனைந்து கிடக்காமல் இயல்பாய், இயற்கையாய், இனிமையாய், துணிவாய்காதல் இலக்கியத்தில் புதிய தடத்தைப் புதுவையில் இருந்த போட்டுத்தந்திருக்கிறார் ஆலா (புதுவை தமிழ்நெஞ்சன், கமுக்கம், பக்.102)
என்று புதுவைதமிழ் நெஞ்சன் பாராட்டும் படியாக தமிழ் சங்க கவிதைகளை அழகும், இயற்கையோடு இயைந்த வாழ்வை பின்னிய நேர்த்தியும் கொண்டதாக விளங்குகின்றன இத்தொகுப்பு கவிதைகள்.
                        “உதிர்ந்து கிடக்கும்
                        கொடுக்காப்புளிச் சுளையைப்
                        பார்க்கும் பொழுதெல்லாம்
                        செவ்வரி ஓடிய
                        உன் வெள்ளை விழிகள்
                        நினைவுக்கு வருகிறது.
                        பட்டு இதழ் இமைகளைச்
                        சட்டென்று மூடிக்கொள்-தோழி!
                        ‘மைனாக்கள்
                        கொத்திவிடப் போகிறது-உன்
                        சிவப்பேறிய விழிகளை.”                 (கமுக்.33)
            எழுதுவது காதல் கவிதையாக இருந்தாலும் அதிலும் சமூக கருத்துக்களை, உலகமய கொடுமைகளை, பண்பாடு சிதைந்து வருவதை, இயற்கை அழிந்துவருவதை, நமது பாரம்பரிய மருத்துவ, இயற்கை வாழ்வின் மகத்துவத்தை என உணர்த்தியபடியே ஆலா கவிதை புனைந்துள்ளார்.
                        “வீட்டிலிருந்து வெளியிலா போனா
                        சோத்தோட தண்ணியும்
                        கொண்டு போறாங்க - நாளைக்குக்
                        காத்தையும் தூக்கிக்கினு
                        போகவேண்டியதுதான்.
                        பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யனும்
                        மக்கள்                                   
                        மூச்சு இழுப்பது கரிவளி.
                        வெளியிடுவது உயிர்வரி.
                        தூயத்தென்றலாய் வெளிப்படுவது காதல்”           (கமுக்.31)

                        இந்த தொகுதி வடிவமைப்பு மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டது.
            1. இன்றியமையாத/புழக்கத்தில் உள்ள கவிதையில் கையாளப்பட்ட தனித்தமிழ்ச்சொற்களுக்கு புழக்கத்தில் உள்ள அயற்சொல் அகராதி தொகுத்து தந்திருப்பது. இதன்மூலம், வாசகர், அயற்சொல் தவிர்த்து தனித்தமிழ்சொல் பயன்படுத்த தூண்டுவது.
            2. காதல் கவிதை தொகுதி என்பதால், காதல் குறிப்பேடு போல, கவிதைகள் அனைத்தும் - ஆலாவின் கையெழுத்திலேயே அச்சாக்கப்பட்டுள்ளது.
            3. கவிதைகளுக்குள் மறைந்துவரும் தமிழ்ப் பண்பாடுகளை, தாரவங்களை, மருத்துவ உணவுவகைகளைப் பதிவுசெய்வதோடு - மறைந்துவரும் தமிழக விளையாட்டுக்களைப் படமாக்கி ஒவ்வொரு பக்கமும் பதிவு செய்து பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
            அவ்வகையில், டும்டும்பீபீ, கண்ணாமூச்சி, குச்சியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, சிலம்பம், தாண்டுதல், செக்கு, லாக்கு, ஆபியம், கல்பாரி, சீப்பு சோப்பு கண்ணாடி, உசுக்கோபாரி, சடுகுடு, யார்அது?, பம்பரம், கோட்டிப்புள், துருப்பு, குச்சியாட்டம், ஒருகொடம், குதிரை சில்லு, ராட்டிணம், தண்ணிக்கானு முதலான விளையாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, ஆலாவின் தமிழ் உணர்வையும், எதையும் சிரத்தையும், சிந்தனையும் கலந்தாற்றும் தொழில் வண்மையும் அறிய முடிகிறது.


     3.   திமுரு
          ஆலாவின் மூன்றாவது கவிதை தொகுதி திமுரு, இத்தொகுதியில் 104 சென்ரியூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
சென்ரியூ என்பது ஹைக்கூ வடிவ கவிதையின் இன்னொரு வடிவம். அங்கதம் என்பது சென்ரியூவின் முதல் உள்ளடக்கம், இரண்டாவது மனித நடத்தைக் கோலங்களையும், மனித பலகீனங்களையும் பற்றிய வேடிக்கை மிகுந்த கவனிப்பு.” “சென்ரியூ இயற்கை அழகைப் பற்றியல்ல. சிதரல்களையும் தோல்விகளையும் பற்றியது. (நிர்மலாசுரேஷ், சிரிக்கும் வில்லோமரம் சென்ரியூ, பக்.06)   
            ஒருவகையில் தமிழில் எழுதப்படுகிற ஹைக்கூகள் எல்லாமே சென்ரியு வகையிலேயே அடக்கமுடியும் என்பது ஆய்வாளர் கருத்து, ஆனால், தமிழகத்தில் முதலில் இவ்வடிவம் ஹைக்கூ என்றே அறிமுகமாகி எழுதப்பட்டு வந்தபின் - ஈரோடுதமிழன்பன் ஹைக்கூ, சென்ரியூ இரண்டும் வேறுவேறு; அதன் தன்மைகளைப் புரிந்து கொண்டு தனித்தனியே தொகுப்பு தேவை என்ற உணர்வுடன் முதன்முதலில் ஒரு வண்டி சென்ரியு என்ற சென்ரியுதொகுப்பை வெளியிட்டார்.(ஜெ.ராதாகிருஷ்ணன், நறுமுகை-1, பக்.08)
ஆனால், அதற்கு முன்பே நூற்றுக்கணக்கில் ஹைக்கூ தொகுப்புகள் தமிழில் இரண்டு வகைகளும் கலந்தே வெளிவந்துவிட்டன. ஆகையால், ஒட்டுமொத்தமாக பிரித்துபார்க்க முடியாமல், தமிழைச் பொறுத்தவரை ஹைக்கூஎன்றே அறிவது போதுமென்பது ஆய்வாளர் கருத்து.
            ஆனால், ஈரோடுதமிழன்பனின் ஒருவண்டிசென்ரியுநூல் வந்தபின்பு நகைச்சுவை பயக்கும் சென்ரியு வகை கவிதைகளைக் கொண்ட தனித்தொகுப்புகள் நிரம்ப வரத்தலைப்பட்டன. அவ்வகையில் குறிப்பிடத்தக்கது ஆலாவின் திமுருதொகுப்பு.
            பல்வேறு சமூக சிக்கல்களையும் தமது கவிதைகளில் பதிவு செய்த ஆலா, முந்தைய தொகுப்புகளை விட கூர்மையாகவும், அங்கதத்தோடும், கவித்துவத்தோடும் இத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.
                                    “பேருந்துசீட்டு தொலைத்துப்
                                    பதைத்துப் போனேன்
                                    பின்னால் தொலைபேசி எண்
                                                                                    (திமுரு.55)     
                        இதுபோன்ற வெறுமனே நகைப்புக்கான / விளையாட்டுக்கான கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. முதல் தொகுப்பில் இடம் பெற்ற ஒரு சில ஹைக்கூக்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன. (திமுரு. பக்.30,52)
            முந்தைய தொகுப்புகளைப் போலவே, அயற்சொல்அகராதி இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. சென்ரியு கவிதைகள் ஒன்று, இரண்டு தனித்தனியே பெரிய இடைவெளியில் பல்வேறு அழகிய புகைப்படங்களுக்கு கீழே வாசகன் மனம் கவரும் வண்ணம் அச்சிடப் பெற்றுள்ளன.    
            வழக்கத்திற்கு மாறாக, இத்தொகுப்பில் ஆலா, முன்னுரைக்கு பதிலாக ஒரு நீண்ட கவிதையை எழுதியுள்ளார். அது அவரது சமூக/தமிழ் உணர்வையும், அவரது கனவையும் உணர்த்துகின்றது.
                        “சாதியின் பெயரால்
                        சிதறிக் கிடக்கிறார்கள் தமிழர்கள்
                        திரைப்பட நடிகர்களுக்கான
                        ரசிகர் மன்றங்களின் போதையில்
                        வாழ்க்கையைச் சீரழித்துக்கொள்ளும்
                        இளைஞர்கள்.
                                                                        (திமுரு.88)
எனத் தொடங்குகிறது அவரது அவ்வுரை.

தொகுப்புரை
            தமிழ் கவிதையில் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதுக்கவிதையும், அதன் தொடர்ச்சியில் அறிமுகமான ஹைக்கூகவிதையும், அதில் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக உருவாகிய ஆலாவும், அவரது படைப்புகளும் இக்கட்டுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஆலா சுற்றுச்சூழலிய, பெண்ணிய, தலித்திய, சமூகவிமர்சன எதார்த்த எழுத்தாளராக - கலகக்காரராக அறியப்படுகிறார்.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

சிறார் பாடல்கள்


சிறார் பாடல்கள்:
தமிழ் யாப்பிலக்கணங்களை முன்வைத்து...
-----------------------------------------
-   ஜெ.இராதா கிருஷ்ணன்



அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிகள் எவ்வளவுக்கு எவ்வளவு வளர்ந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு உலகமும் சுருங்கிப் போய்விட்டது. தொடர்புகள், அறிவுப்பாய்ச்சல், மிகச் சுலபமாகிவிட்டது. ஆனால், அதற்கு எதிரடியாக மனிதன் அருகிலிருக்கும் சகமனிதனிடமிருந்து அன்னியமாகி, குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அன்னியமாகி, தனித்தனியே எந்திரங்களில் தன்னைத் தொலைத்து, தனக்குத்  தானே அன்னியமாகி வருகிறான்.
இத்தகு பெரும் கவலைக்கிடமான சூழலில்தான் கரிசனத்திற்குள்ளாகிறார்கள் சிறார்கள். வணிகமயமான உலகம் இவர்களைப் பயன்படுத்தி  முன்பைவிட மிகத்தீவிரமாக பெருமளவில் தம்கடையை விரிக்கும் இதே சூழலில்தான் அவர்களின் ஆன்மாவையும், அறிவையும் வளர்த்தெடுக்கும் வாசிப்புப்பழக்கம், படைப்பாக்கத்திறன், மொழி ஆளுமை என்னும் பலதளங்களில் செயல்படும் சிறார் இலக்கிய முயற்சிகள் பெரிதும் கவனப்படுத்தப்படாமலும், கையகப்படுத்தப்படாமலும் இருக்கிறது.
சிறார் இலக்கியம் பற்றி நாம் நிறைய யோசிக்க வேண்டும். செயல்பட வேண்டும் என்பதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியில் வைத்து மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றின் நுணுக்கங்களை மேலும் ஆராய வேண்டும்” என்கிறார் வ.கீதா ( தமிழ்ப் புத்தக உலகம் )
குழந்தைகளின் மொழி, கற்பனை வளர்ச்சி ஆகியவற்றில் குழந்தை இலக்கியத்தின் பங்கைத் தமிழர்கள் உணர்ந்திருந்தால் தமிழில் குழந்தை இலக்கியம் செழித்து வளர்ந்திருக்கும். அதன்வழி, நல்ல அறிவார்ந்த மொழிவளம் மிக்க தலைமுறைகள் உருவாகியிருக்கும். இந்த நிலைமை மலையாளம் போன்ற மொழிகளோடு ஒப்பிடும்போது அங்கு செழித்திருக்கும் குழந்தை இலக்கியம், இதழ்கள் போன்றவை தமிழில் இல்லாமல் இருப்பதின் அறிவு வறுமை வரலாற்று அவமானமாக இன்னும் நிலைபெற்று நிற்பது கண்டு நாம் வெட்கிதான் தலைகுனிய வேண்டும் என்கிறார் முனைவர் கி.நாச்சிமுத்து( புதிய புத்தகம் பேசுது )
தமிழில் சிறார் இலக்கியம்
மிக நீண்ட தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் சிறார்கள் மிகவும் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து கவனப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழில் பிற்கால ஔவையாரின் ஆத்திச்சூடி முதலாகவே சிறார் இலக்கியம் முகிழ்க்கிறது. அதற்கு முன்பு - தமிழ் இலக்கியங்களில் சிறார்கள் இருக்கிறார்கள். ஆனால், சிறார்களுக்கான இலக்கியம் இல்லை. ஔவையாரின் சிறார் இலக்கியமாக கருதப்பெறும் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதலியனவும் வாய்ப்பாடுகள் போல ஓர் அறிவுரைத்தல், நேரடி கற்றல்-கற்பித்தல் செயல்பாடாகவே அமைந்திருக்கிறது. ஆட்டம், பாட்டம், கற்பனை என்னும் குழந்தை உள்ளத்தைத் தொடும் இலக்கியமாக இல்லை.
ஆனால், அதே சமயம் தமிழில் நாட்டார் வழக்காற்றில், வாய்மொழி மரபில் சிறார்களின் இடம் மிகப்பெரியதாக இருந்து வந்துள்ளது.
Ø  குழந்தையைப் பாடுவது
Ø  குழந்தைக்காகப் பாடுவது
Ø   குழந்தைகளே பாடுவது
என சிறார் பாடல்கள், கதைகள், விளையாட்டுக்கள் பலநிலைகளில் பதிவாகியுள்ளன.
மற்ற பாடல்கள், கதை மரபுகள் போல இவை ஏன் ஏட்டிலக்கியங்களில் பதிவாகவில்லை. எனில், அக்கால கற்கை மரபு, எழுதுபொருள், கருவிகளின் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம்.
எனவேதான், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த அச்சுவூடக வரவு, புதிய கல்வி பரவல் முதலியவற்றால் உருவான புதிய வாசிப்பு மரபு என்பது  பல்வேறு நாட்டார் வழக்காறுகளில் இருந்து கதைகள், பழமொழிகள், விடுகதைகள், பாடல்கள் என்பவற்றின் தொகுப்புகளின் பதிவு மூலம் புதிய சிறார் இலக்கியத் தோற்றத்திற்கு ஏட்டிலக்கிய வடிவம் கிடைக்கிறது.
எனினும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கவிமணி, பாரதி ஆகியோரின் மூலம் சிறார் பாடல்கள் என்ற ஏட்டிலக்கிய வகைமை தோற்றமுறுகிறது.
1915 - பாரதி - பாப்பா பாட்டு
1938 - கவிமணி - மலரும் மாலையும்
1939 - மு.வ - குழந்தைப் பாட்டுகள்
1943 - பாவேந்தர் - இசையமுது
1949 - தமிழண்ணல் -  குழந்தை இலக்கியம்
1950 - அழ. வள்ளியப்பா - மலரும் உள்ளம்
தொடர்ந்து இலக்கிய வகைமைகளில் மிக முக்கியமானதும், கவனத்துடன் எழுதப்படவேண்டியதுமான சிறார் இலக்கியத்தின் அவசியம் உணர்ந்து பேராசிரியர்களும், கி.வா.ஜ, அ.கி. பரந்தாமானார், கிருஷ்ணன் நம்பி, பெரியசாமித் தூரன் முதலான படைப்பாளிகளும் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அழ.வள்ளியப்பா, பூவண்ணன் முதலான சிலர் சிறார் இலக்கியத்திற்கெனவே தங்களை வடிவமைத்துக் கொண்டனர்.
சக்தி வை.கோவிந்தன், அழ.வள்ளியப்பா முதலானோர் 1950ல் குழந்தை எழுத்தாளர் சங்கம் தொடங்குகின்றனர். ’அணில்’, ’முயல்’, ’டமாரம்’ , ’பாலர் மலர்’, ’பூஞ்சோலை’ முதலான பல்வேறு சிறார் இதழ்கள் தோன்றியுள்ளன. பிறமொழி ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. 1957 முதல் இந்தியாவில் குழந்தைதினம் கொண்டாடப்பட தொடங்கியது. வானொலி முதலான ஊடகங்களில் சிறப்புப் பகுதிகள் ஒதுக்கப்பட்டன. அரசு சிறார் இலக்கியத்தை ஊக்குவிக்க தொடங்கியது; 1979 குழந்தைகள் ஆண்டாக கொண்டாடியது. இக்காரணிகளால் 1950 முதல் 1980 வரையிலான காலக்கட்டங்களில் தமிழில் சிறார் இலக்கியம் செழித்து வளர்ந்தது.
நமச்சிவாய முதலியார், மணிதிருநாவுக்கரசு, மயிலை சிவமுத்து, பெ.நா.அப்புசுவாமி முதலானோர் தமிழ் பாடநூல்களின் வழியாக சிறார் இலக்கியத்தை வளர்த்தனர். இவ்வாறாக, 80கள் வரை செழித்த மரபில் நூற்றுக்கும் குறையாத படைப்பாளிகள் பங்காற்றியுள்ளனர்.
எண்பதுகளுக்குப் பிறகு தொய்வடைந்த இம்மரபு 2000க்கு பிறகு புதிய திசையில் பயனிக்கத் தொடங்கியுள்ளது. உளவியல் மற்றும் அறிவியல் அடிப்படையிலான ஆக்கபூர்வமான தேவையுணர்ந்து மீண்டும் கையிலெடுக்கபட்டு வருகின்றன. அவ்வகையில் இரா.நடராஜன், யூமா.வாசுகி, கம்பீரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கீரனூர் ஜாகிர் ராஜா, வேலு.சரவணன் முதலானோரின் ஆக்கங்கள் மொழிபெயர்ப்புகள் குறிப்பிடத்தக்கன. பாரதி புத்தகாலயம், தாரா, துலிக்கா முதலான பதிப்பகங்கள் சிறார் இலக்கியங்களை முன்னெடுத்து வருகின்றன.
இவ்வளவு வளர்ச்சிகள் இருந்த போதும் இவை தமிழ்ச் சமூகத்தில் முறையான சிறார் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கியுள்ளனவா என்பது ஐயத்திற்குரியது. காரணம் இங்கு கவனப்படுத்துவதும், மரபின் நீட்சியாக நவீனத்தை உணர்ந்து இரு தரப்பின் கனத்தையும் உணர்ந்து மதிப்பிட்டு பொருட்படுத்தும் மரபு அருகியுள்ளது. மதிப்பீடும், மதிப்பீட்டின் வழி புதிய பாதைகளை அமைப்பதும் இல்லை. மேலும் தமிழகத்தின் இந்த நிலைக்கு வேறுசில அரசியல் காரணங்களும் உள்ளன.
ஒரு நூற்றாண்டு கால தமிழ்ச் சிறார்  இலக்கிய மரபு கல்விப் புலங்களில் எவ்வாறு சலனப்படுத்தப்படுகிறது என்பதற்கு தக்க உதாரணம் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள். தமிழில் மறுமலர்ச்சி கால இலக்கியங்களான உரைநடை, புதினம், சிறுகதை, புதுக்கவிதை என வகைபிரித்து வரலாறு பேசும் இலக்கிய வரலாற்று நூல்கள் சிறார் இலக்கியத்தை  ஒரு தனி வகையாக வகைப்படுத்தியதே மிக அரிது. மேலும், இத்துறையில் நிகழ்த்தப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகளும் மிகக் குறைவு. செம்மொழி மத்திய நிறுவனம் வெளியிட்ட தமிழ் முனைவர்பட்ட ஆய்வேடுகளின் பட்டியலில் உள்ள ஆயிரம் தலைப்புகளில் இத்துறையில் நாட்டார் வழக்காற்றியலுடன் தொடர்புடைய ஆய்வுகளையும் சேர்த்து வெறும் 13 ஆய்வுகளே நிகழ்த்தப்பட்டுள்ளன.

மறுமலர்ச்சியில் யாப்பிலக்கண மரபு
அச்சுவூடக வரவும், புதிய கல்வி பரவலும் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து பழைய இலக்கண, இலக்கியங்கள் அச்சானது மட்டுமின்றி, அவற்றின் பரப்புகள் மீது புதிய வீச்சும், வாசிப்பும் நிகழ்த்தப்பட்டன. புதிய கல்வி திட்டங்களுக்கு தக பாடநூல்களுக்கு எளிய இலக்கண வினா - விடை, அறிமுக நூல்கள், உரைநடை நூல்கள் தோன்றின.
இவற்றின் தொடர்ச்சியாக, எளிமைப் படுத்தியும், புதிய மாற்றங்களைச் சேர்த்தும் தரும் புதிய யாப்பிலக்கண நூல்கள் தோன்றின. அவ்வகையில் 19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதம்,முத்துவீரியம், அறுவகைஇலக்கணம் முதலான ஐந்திலக்கண நூல்களும், வண்ணத்தியல்பு, கட்டளைக் கலித்துறை, விருத்தப்பாவியல்,செய்யுளிலக்கணம் முதலான தனி யாப்பிலக்கண நூல்களும் குறிப்பிடத்தக்கன.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரைநடை இலக்கிய வகைகளான புதினம், சிறுகதை, கடித இலக்கியம் முதலியனவும், இவற்றின் செல்வாக்கில் தோன்றிய புதுக்கவிதையும் கோலோச்சின. இதனை புதுக்கவிதைக்கு மாற்றாகவும், தமிழ் மரபுக்கவிதையைக் காக்கவும், எளிமைப்படுத்தி உரைக்கும் நோக்கமும் 1950 களுக்குப் பிறகு பல்வேறு யாப்பிலக்கண நூல்கள் தோன்றியுள்ளன.
அவற்றில் கீழ்க்காணும் பத்து நூல்கள் குறிப்பிடத்தக்கன.
1.   யாப்பொளி - ஆர்.சீனிவாச ராகவாச்சாரிய -1957
2.   யாப்பதிகாரம் - புலவர் குழந்தை -1959
3.   இலக்கண விளக்கம்: யாப்பியல் - கே.ராஜகோபாலாச்சாரியார் - 1963
4.   கவிஞராக - அ.கி. பரரந்தாமனார் - 1964
5.   கவிபாடலாம் - கி.வா.ஜகந்நாதன் -1966
6.   யாப்புநூல்  த.சரவணத்தமிழன் - 1981
7.   எளிதாகப்பாடலாம் - இராமு.இளங்குமரன் -1989
8.   தென்னூல்: இலக்கியப்படலம் - ச.பாலசுந்தரம் -1991
9.   பாவலர் பண்ணை - இரா.திருமுருகன் - 1997
10. யாப்பறிந்து பாபுனைய - மருதூர் அரங்கராசன் – 2005

இவற்றில் ’யாப்பொளி’ தவிர்த்த மற்ற நூல்கள் காரிகைக்குப் பிந்தைய பா வடிவங்களின் ஆட்சியைக் கண்டறிந்து கும்மி, கீர்த்தனை, கண்ணி, சிந்து, வண்ணம், சிந்துப்பா முதலியவற்றுக்கும் இலக்கணம் கூறுகின்றன.
80களுக்குப் பிறகு உருவான யாப்பிலக்கண நூல்களில் யாப்புநூல், தென்னூல், யாப்பறிந்து பாபுனைய ஆகிய நூல்கள் புதுக்கவிதைக்கும் , ஹைக்கூவுக்கும் கூட இலக்கணம் உரைக்கின்றன. இது, புதுக்கவிதைகளுக்கு எதிராக செயல்பட்ட மரபு இலக்கணிகளின் மனமாற்றத்தையும் அவர்களின் புதியன ஏற்கும் பண்பையும் உணர்த்துகின்றன. இன்னொரு வகையில் புதுக்கவிதையின் நிலைபேற்றை உணர்த்துகின்றது.
இப்படி, யாப்பு நிலையோடு முரண்பட்ட புதுக்கவிதையையும் கவனப்படுத்திய இலக்கணிகள் 1950களிலேயே தனித்த யாப்பியல் மரபுகளைப் பெற்றுவிட்ட சிறார்பாடல்களையும் ஒருவகையாக இலக்கணம் கூறவோ, அதன் யாப்பியல் மரபை ஆராயவோ முற்படவில்லை. மேற்படி, பத்து இலக்கணிகளில் அ.கி.பரந்தாமனார் ‘எங்கள் தோட்டம்’ என்ற சிறார் பாடல்கள் தொகுப்பு தந்தவர். கி.வா.ஜ சிறார் பாடல்களுடன் தொடர்புடைய நாட்டார் பாடல்கள் குறித்து பலப்பட ஆராய்ந்தவர்; தொகுத்தவர். எனினும், சிறார் பாடல்களின் தனித்த  யாப்பியல்புகளை உணர்ந்து சுட்டவில்லை. ஆனால், த.சரவணத்தமிழனார் முதன் முதலில் தமது ‘யாப்புநூலில்’ சிறார்பாடல்களுக்குச் ‘மகப்பா’ என தனி இலக்கணம் படைக்கிறார். இவரைப் பின்பற்றி மருதூர் அரங்கராசனும் தமது நூலில் ‘குழந்தைப்பா’விற்கு இலக்கணம் உரைக்கிறார்.
இதன்மூலம் நவீனத்தின் நீட்சியாக மரபையும், மரபின் நீட்சியாக நவீனத்தையும் ஆக்கத்துடித்த த.சரவணத்தமிழனாரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும், சிறார்பாடல்களின் அவசியம் உணர்ந்து வெளிப்படுத்தியமையையும் உணரத் தக்கது.

சிறார் பாடல்களில் யாப்பு
வாய்மொழி இசை மரபுகளிலிருந்து செம்மைப்பட்ட ஏட்டுமரபாகும் பாடல்களுக்கு இலக்கணிகள் உரிய வடிவ இலக்கணம் தந்துள்ளனர். அந்தவகையில் பா, பாவினங்களுக்கு பிறகான பல்வேறு புதிய பாவடிவங்களுக்கும் தமிழ் யாப்பிலக்கணிகள் இலக்கணம் படைத்துள்ளனர். அந்தவகையில்தான், நாட்டார் பாடல்மரபை தழுவி சிறார்களுக்குப் படைக்கப்பட்ட பாடல்களின் இயல்புகளை, யாப்பமைதிகளை ஆராய்ந்து அதன் தனித்தன்மையை உணர்த்துவதின் மூலம் நல்ல சிறார் பாடல்களுக்கான கட்டமைப்பை உணர்ந்து கொள்ள முடியும்.
அந்த வகையில், ‘குழந்தைப் பாடல்களின் பாடுபொருளும் பாடுநெறியும்’ குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட முனைவர் வெ.தனலெக்குமி சிறார் பாடல்களில் வெளிப்படும் வடிவங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார் (1980; பக்.294)
1.   மரபு வழிப்பட்டன
(அ) வெண்பா
(ஆ) குறட்டாழிசை
(இ)கலித்தாழிசை
(ஈ)வஞ்சித் தரவு
(இருசீர் அடி, முச்சீரடி மட்டும் அடிவரையறை இன்றி வருவது)

2.   புதியன
(அ) வஞ்சிக்கண்ணி
(ஆ) தாளநயப் பாடல்கள்

இவையன்றியும் வெளிப்பாட்டு முறையால்,
1.வருணனைப் போக்கு
2.விளித்தல் முறை
3.உரையாடல்
4.வினா விடை என(பக்.305) பலவகைப்படுதலை ஆராய்ந்துள்ளார்.

இவற்றின் தொகுப்பாக,
-     இருசீர்,முச்சீரடிகள் பயில்வும்
-     தொடை நயமும், குறிப்பாக இயைபுத் தொடையின் மிகுதி
-     எளிய சந்த மெட்டுகளில் பாடல் அமைத்தலும் வெளிப்படுத்தப்படுகின்றன.

யாப்புநூல்
      “பருப்பொருள் கூறும் கருத்துடைத் தாக
வழக்கிடைப் பயிலும்சொற்கள் கொண்டே
எளிய சந்தம் ஏற்றிடல் மருப்பா”  (யாப் .148)
      “பருப்பொருள்களை எடுத்துக் கூறும் கருத்துக்கள் கொண்டதாக, வழக்கத்தில் பயிலும் சொற்களை உடைத்தாக எளிய சந்தம் ஏற்றி உரைத்தல் குழந்தைப் பாக்களாகும்” என உரை செய்கிறார் த.சரவணத்தமிழன்.
வாய்மொழி சிறார் பாடல்களையும் உதாரணமாககாட்டி, இதன் வடிவம் பலவிதமாக அமையலாம். ஆனால், இருசீரடி, முச்சீரடிகளில் பாடல் அமைவது நல்லது எனக் குறிப்பிடுகிறார். இதுவே, குழந்தைகள் எளிமையாக புரிந்துகொள்ளவும், இளிமையாக பாடவும் உதவும்.
”வடிவம் பலவும் வளிரினும் ஈரசை
முச்சீர் அடிகள் மிக்கு வரலே” (யாப்.149)
சிறார் பாடல்களுக்கு சிறந்த உதாரணங்களையும் அவரே நூற்பா வடிவில் தருகிறார்.
     “வள்ளி யப்பா வளஞ்செய் தாலும்
இலெமென் பாக்களே இயற்கை யாகும்”  (யாப். 150)
சிறார் பாடல்கள் இயற்றுவதில் அழ.வள்ளியப்பா பெரிதும் அறியப்பட்டாலும், ’கொக்கரக்கோ’, ‘சிப்பாய் வரார்’ போன்ற தொகுப்புகளை வெளியிட்ட ‘இலக்குமணனே’ இயற்கையான ஓசையோடு சிறார் பாடல்கள் படைத்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமது தமிழியக்க உணர்வோடு பாவேந்தரின் ‘இளைஞர் இலக்கியத்தை’யும், பெருஞ்சித்தரனாரின் ‘பள்ளிப் பறவைகளை’யும்  பரிந்துரைக்கிறார்.
     “இளைஞர் இலக்கியம் பள்ளிப் பறவைகள்
இரண்டு தொகுப்பும் தமிழறி வூட்டும்”  (யாப்.151)
இவையாவும், த. சரவணத் தமிழனாரின் புலமையையும், தக்கதுணர்ந்துரைக்கும் திறத்தையும்வெளிப்படுத்துகின்றன.

யாப்பறிந்து பா புனைய
மருதூர் அரங்கராசன் எளிமையாக பல்வேறு தமிழ் பா வடிவங்களை உணர்த்துவதாக உரைநடையில் ஆய்வு முறைமையில் உருவாக்கிய நூலே ‘யாப்பறிந்து பா புனைய’. இந்நூலில் தமிழ் இலக்கியங்களில் பயின்றுவந்துள்ள பல்வேறு பாவடிவங்களையும் தொகுத்து வழங்க முயன்றுள்ளார்.
அவ்வகையில் சிறார் பாடல்களையும் கண்டுணர்ந்து ‘குழந்தைப்பா’ என்ற தலைப்பில் (பக். 258 - 270)விரிவாக ஆராய்ந்துள்ளார்.
குழந்தைப்பாவின் பாடுபொருள், இலக்கணம், வளம்சேர்த்தவர்கள், முன்னோடிகள், இலக்கணம் கூறும் யாப்புநூல், வேண்டுகோள் என்னும் தலைப்புகளில் பேசுகிறார்.
இவர் சிறார் பாடல்களின் யாப்பிலக்கணமாக கீழ்கண்டவற்றைச் சுட்டுகிறார்.
1.   எளிமை, இனிமை, சந்தம், ஒலிநயம்
2.   பழகு தமிழ்ச் சொற்கள்,சிறுசிறுசொற்கள்
3.   நினைவில் வைத்துக்கொள்ள எதுகை, மோனை, இயைபு
4.   தொடர், சொற்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுதல்
5.   குறளடி, சிந்தடி, அளவடிகளில் மட்டும் அமைதல்
6.   விடுகதை, புதிர்தன்மை
7.   கருத்து அமைத்தல்
       “1972இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட ‘குழந்தை எழுத்தாளர் யார்? எவர்?’ என்ற நூலில் 370 குழந்தை எழுத்தாளர்கள் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன” என்கிறார்.(பக்.264)
Ø   3 - 6 வயது வரை - மழலைப் பாடல்கள்
Ø  6 - 9 வயது வரை - குழந்தைப் பாடல்கள்
Ø  9 - 12 வயது வரை - சிறுவர் பாடல்கள்
என பகுக்கும்  குழ.கதிரேசனின் (பக்.270) கருத்தை வெளிப்படுத்துகிறார். இறுதியாக, இவ்வகை இலக்கியம் படைக்க படைப்பாளர்களை அழைக்கிறார்; வேண்டுகிறார்.
இவை - தமிழ் மரபிலக்கணிகள் சம கால இலக்கிய தேவையை உணர்ந்து செயல்பட்டமையை உணர்த்துகின்றன. இதிலிருந்து சிறார் பாடல்களின் வளர்த்தெடுப்பும், சிறார்கள் வாசிப்பு வழக்கத்திற்கு கொண்டுவரப்படுதலும், அவர்களே படைத்தலும் ஆகிய அடுத்த நிலை நகர்வையும் கோரி நிற்கின்றன.
···
படையல்!
தனித்தமிழறிஞர் த.சரவணத்தமிழனாருக்கு...

ஆய்வுக்கு உதவிய ஆக்கங்கள்:
1. வெ.தனலக்குமி, குழந்தைப் பாடல்களில் பாடுபொருளும் பாடுநெறியும், மங்கை வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு, 1990.
2. ச.சரவணத்தமிழன், யாப்பு நூல், இயற்றமிழ்ப் பயிற்றகம், திருவாரூர், முதற்பதிப்பு, 1981.
3. ய.மணிகண்டன், தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, விழிகள் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2001.
4.மருதூர் அரங்கராசன், யாப்பறிந்து பாபுனைய... , ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2005.
5. தமிழ்ப் புத்தக உலகம், புதிய புத்தகம் பேசுது, சென்னை, முதற்பதிப்பு, 2009
6. அம்புயம் யுவச்சந்திரா, குழந்தை இலக்கியத்திற்கு குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பங்களிப்புகள், சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு, 1982.
7. அ.அமல அருள் அரசி,  சிறுவர் புதினம்: ஆய்வியல் நோக்கு , சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு, 1998.

  
பின்னிணைப்பு
சிறார் வழக்காறுகள் / சிறார் இலக்கியம் குறித்த முனைவர் பட்ட ஆய்வேடுகள் பட்டியல்
வ.எ
ஆய்வாளர் பெயர்
ஆய்வுத்தலைப்பு
ஆண்டு
நெறியாளர்
பல்கலைக் கழகம்
1
அம்புஜம் யுவன்சந்திர இரம்யா 
குழந்தை இலக்கியத்திற்கு அழ. வள்ளியப்பாவின் கொடை 
1982
சுந்தரம். எம் முனைவர் 
சென்னை 
2
அமலா அருள் அரசி 
சிறுவர் புதினம்,ஆய்வியல் நோக்கு 
2001
ஞானபுஷ்பம். ஆர் முனைவர் 
சென்னை 
3
எத்தில்மேரி பாய். ஜெ 
சிறுவர் உளவியல் நோக்கில் கிருத்துவச் சிறுகதைகள் 
2003
குருநாதன். ஆர் முனைவர் 
சென்னை 
4
கருணாநிதி. எம் 
தமிழக நாட்டார் வழக்காற்றிய சிறார் வழக்காறுகள் (நடுநாடு
2002
அரசு. வீ முனைவர் 
சென்னை 
5
சுந்தர்ராஜன். எஸ் 
பள்ளி சிறுவர்களுக்கான அறநெறிக் கல்வி 
2006
முத்துராமலிங்க ஆண்டவர். வி.எம் முனைவர் 
சென்னை 
6
ஞானசிங்காரம். ஞா 
பூவண்ணனின் சிறுவர் நாவல்கள் ஓர் ஆய்வு 
1995
சுப்பிரமணியன். கி முனைவர் 
பாரதியார் 
7
தனலெட்சுமி. வி 
குழந்தைப் பாடல்களில் பாடுபொருளும் பாடு நெறியும் 
1987
லீலாவதி. தி முனைவர் 
சென்னை 
8
புனிதாசலம் ஜீவி. ஆர் 
குழந்தை மருத்துவம்-குமரி மாவட்டம் 
2004
ரோஸ்லட் டானி பாய் முனைவர் 
மனோன்மணீயம் சுந்தரனார் 
9
மரியசூசை.  
தமிழக நாட்டார் வழக்காற்றியல் சிறார் வழக்காறுகள் கதைகள் வேலூர் மாவட்டம் 
2002
அரசு. வீ முனைவர் 
சென்னை 
10
மீனாட்சிசுந்தரம். யூ 
கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்புறப்பாடல்களில் குழந்தைகள் 
1987
நடராஜன். டி முனைவர் 
மதுரை காமராசர் 
11
மேரி கிளோரி செலின். எஸ் 
விவிலியத்தில் குழந்தைகள் 
2006
ஸ்ரீகுமார். எஸ் முனைவர் 
மனோன்மணீயம் சுந்தரனார் 
12
வேலு. கே 
சிறுவர் மொழிகளில் காட்டும் சமுதாயச் சிந்தனைகள் 
2004
தங்கதுரை. எஸ் முனைவர் 
சென்னை 
13
ஜெகதீஸ்வரி.  
சிறுவர்களின் நீதிநூல்கள் 
1980
நவனீதகிருஷ்ணன். எம் முனைவர் 
மதுரை காமராசர் 

# இப்பட்டியல் செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் வெளியிட்ட தமிழ் முனைவர்பட்ட ஆய்வேடுகள் பட்டியலை அடிப்படையாக்கொண்டு உருவாக்கப்பட்டது.