சனி, 26 ஜனவரி, 2013

கலக குரலாக தெறிக்கும் ஆலா கவிதைகள்!

கலக குரலாக தெறிக்கும் ஆலா கவிதைகள்! - ஓர் எளிய அறிமுகம்

: ஜெ.ரா

---------------------------------------------------------------------------

ஆலா


          இதுதான் முதல் எனச் சொல்லமுடியாததாய் காலம் காலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது தமிழ்க்கவிதை நதி. எத்தனையோ பொருண்மைகள்; எத்தனையோ கவிதைகள்; எத்தனையோ கவிஞர்கள்; எல்லாரும் விழுங்கி வளர்ந்து கொண்டே இருக்கிறது தமிழ்க்கவிதை உலகம்.
            “கவிதை இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்பது ஓர் அடிப்படையான உண்மை கற்பனையும், அழகுணர்வும், நாடகப்பண்பும், கதை சொல்வதும், உணர்ச்சி ஏற்றத்தாழ்வோடு பேசுவதும், இசைநயமும், வரலாற்றுக்குள் வந்த மனிதனிடமிருந்து பிரிக்க இயலாத பண்புகள். மனிதன் என்றைக்கும் சமூக உயிரி என்ற முறையில் அறஉணர்வு முதலிய பண்புகளைக் கொண்டவன். கடந்த கால நினைவுகளை ஒரு பார்வையில் எழுதிக்கொள்பவன் மனிதன். (ஞானி, கவிதையிலிருந்து மெய்யியலுக்கு, பக்.171)
            “தான் அனுபவித்த துயரங்களை இன்னொரு கட்டத்தில் இன்பமாகிப் பார்க்கத் தெரிந்தவன் மனிதன். இந்த வகையில்தான் தனக்குள் எப்பொழுதும் ஓர் கலைஞனை/கவிஞனைக் கொண்டிருக்கிறான் என்று சொல்ல முடியும். கவிதையியல் என்பது குறித்துப் பேசும் பொழுது இந்த அடிப்படை உண்மைதான் நம் கவனத்தில் முதன்மையாய் வரவேண்டும். (ஞானி, கவிதையிலிருந்து மெய்யியலுக்கு, பக்.171)
            இந்த கலைமனம்தான் தமிழ் நெடும்பரப்பில் மிக நெடிய வரலாற்றை கவிதைக்கு உருவாக்கி வைத்திருக்கிறது.
            காலந்தோறும் கவிதை ஓடிவந்தாலும் அது, பழையதாகவே நின்றுவிடாது சமகால செய்திகளைச் சொல்வதற்கு தன் வடிவங்களையும் மாற்றி வந்துள்ளது.
            -பட்டாக,
            -கலிப்பா, பரிப்பா, வஞ்சிப்பாவாக
            -பின்பு ஆசிரியப்பா, வெண்பாவாகபா இனங்களாக
            -பின்பு சந்தம், வண்ணம், கும்மி,
           -கண்ணிகளாக
            -பிறகு கீர்த்தணை, சிந்து
என பல்வேறு இசைவடிவங்களாக காலந்தோறும் கவிதை வளர்ந்து விரிந்துள்ளது. அந்த வகையில் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதுக்கவிதை முக்கியமானது.
              “புதுக்கவிதை இன்றைய தமிழனின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு புது அம்சத்தை முதன் முதலாகச் சொன்ன இலக்கிய வடிவமாகும். அந்த வகையில் புக்கவிதை வெறும் வடிவ ரீதியாக மட்டுமின்றி உள்ளடக்க ரீதியாகவும் நவீனயுகத்தில் நெருக்கடிமிக்க வாழ்க்கையை வாழும் தமிழனைக் காட்டுகிறது (தமிழவன், இருபதில் நவீனதமிழ் விமர்சனங்கள், பக்.50)
            வானம் பாடி கவிதை இயக்கத்திற்கு பிறகு தமிழ்ச் சூழலில் 1980களில் சீரிய சமூகஎதார்த்த, விமர்சனஎதார்த்த புதுக்கவிதைகள் பலவும் தோன்றி தமிழ் கவியுலகை செழுமைபடுத்தின. இந்த நேரத்தில்தான் ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூவும், அதன் துணை, இணை வகைகளும் அறிமுகமாயின.
              “தமிழில் மரபு மீறல் எப்படி புதுக்கவிதைக்கு அடித்தளமிட்டதோ, அதே போத்தான் ஜப்பான் மண்ணில் ஏற்பட்ட புதிய கவிதை தாகமே ஹைக்கூ கவிதைகள் வேர்விட்ட காரணமாயிற்று.” (மு.முருகேஷ், கிண்ணம் நிறைய ஹைக்கூ, பக்.03)
                           “ஹைக்கூ ஒரு சுகமான அனுபவம்தான். முதலிரண்டு வரிகளில் ஒரு எதிர்பார்ப்பையும், மூன்றாம் வரியில் ஒரு இன்ப அதிர்ச்சியையும் பீறிடச் செய்யும் நல்ல ஹைக்கூ (நெல்லை.சு.முத்து, புத்தாயிரம் தமிழ் ஹைக்கூ, பக்.09)
            இந்த ஹைக்கூ வடிவம் தமிழில் சோதனை முயற்சியாக 1916-1970 களில் அறிமுகமாகி - 1970-1994 இல் பூக்கத்தொடங்கி, 1994-2003 வாக்கில் வளர்ச்சியைக்கண்டது.4 கிட்டத்தட்ட 140க்கும் மேற்பட்ட நூல்கள் தோன்றி பெரு எழுச்சியைப் பெற்றுவிட்டது. (நெல்லை.சு.முத்து, புத்தாயிரம் தமிழ் ஹைக்கூ, பக்.03.) இந்த ஹைக்கூ எழுச்சி காலகட்டத்தில்தான் ஒரு ஹைக்கூ எழுத்தாளராக அறிமுகமானார் ஆலா. அவர் குறித்தும், அவரது கவிதை  படைப்புகள் குறித்தும் அறிமுக அளவில் ஆராய்கிறது இக்கட்டுரை.

ஆலாவின் பன்முக ஆளுமை
          புதுச்சேரியைச் சேர்ந்த ஆய்வியல் நிறைஞரான ஆலாவின் இயற்பெயர் இரா.முனுசாமி. தனியார் தொழிற்சாலையில் வேலைசெய்து கொண்டே நாடகம், இயக்கம், கவிதை, கதை, சிலம்பம் என பன்முகம் காட்டும் ஆலா இயல்பு கருத்துக்களாலும், கொள்கைகளாலும் முறுக்கேரிய உண்மைப்படைப்பாளி.
            “ஏதாவது செய்யவேண்டும் என்கிற மேம் போக்கான செயலாக இல்லாமல், எதையும் திட்டமிட்டு தெளிவாய், உறுதியாய் சமூக பயன்பாடும், மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு செய்கிற ஆலா தனித்துவமாய் இயங்குகிற ஒரு படைப்பாளி. எழுத்தோடு நில்லாமல் நாடகம் எழுதி நடிப்பதோடு, சிலம்பம், தீப்பந்தாட்டம் என நம் மண்ணின் கலைகளிலும் தேர்ச்சிமிக்க கலைஞன் ஆலா. (மு.முருகேஷ், நறுமுகை-13, பக்.38)
            “எல்லோரும் எழுதுகிறார்களே என்பதற்காய் தானும் எழுதாமல், எழுதுவதில் ஒரு நோக்கம் இருக்கவேண்டும் என்பதை புரிந்துக்கொண்டு எழுதிவரும் ஆலா, எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத அசல் மனிதன். அதனாலேயே சுற்றி வளைக்காமல் கண்ணில் படுகிற சமூகத்தை அஞ்சாமல் அப்படியே தன் கவிதைக்குள் கொண்டுவந்து காட்டுகிறார். (மு.முருகேஷ், நறுமுகை-13, பக்.39)
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கைக்காக அன்றாடம் போராடுவதோடு, ஒட்டுமொத்த சமூக பிரச்சனைகளையும் கண்டு பொறுக்காது  கலைவடிவமாக மாற்றும் கவிஞர் தன்னையே ஒரு குறியீடாக உடைய பறவையைத் தனது கடல்சார்ந்த சூழலுக்கும், இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழும் தமிழர் அடையாளத்திற்கும் வெளிப்பாடாக தமது பெயரை தேர்வு செய்துள்ளார்.
      “ஆலா-
                         இது ஒல்லியான, அழகிய
                         வெள்ளிபோல் வெளுத்த பறவை.
                         கடற்கரை ஓரங்களில்,
                         கூர்மையான சிறகை இடித்து
                         அங்குமிங்குமாகத் திரியும்.
                       
                         அப்பொழுது அதன் அலகும்,
                         கண்ணும் கூர்ந்து
                         கீழ் நோக்கி இருக்கும்.
                       
                         இருந்தாற்போலிருந்து திடீரெனச்
                         சாய்வாகக் கீழே பறந்து
                         இரையைக் கவ்விக் கொண்டு
                         மேலேழுப்பும்.

                         வாழ்க்கையில் அதிக நேரம்
                         இவை பறந்தே செலவு செய்யும்.

 (உயிர்வேலி தொகுப்பின் பின் அட்டையில் ஆலா எழுதிய வரிகள்)

தப்புக் கதிராய் கிடைத்த தமிழ்க்கதிர்
          ‘கலை கலைக்காகவேஎன்று ஒரு கூட்டம் மனித வாழ்வுக்கு அப்பாற்பட்டு போய்க்கொண்டிருக்கிறது. பணம் பண்ணுவதே குறியாய் கண்டதையும் எழுதி பண்பாட்டையையும், மொழியையும் சீரழிக்கிறது ஒரு கூட்டம். புரியாத மொழியில் எழுதி தமது மேதாவி தனங்களை நிறுவி மகிழ்கின்றன ஒரு கூட்டம். கவிதையாய் கண்டதையும் உளரிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இப்படியான பல்வேறு அவலமான சூழலிலும் சமூகத்தை சிந்திக்கும், உணர்வுள்ள ஒரு முற்போக்கு படைப்பாளியாக ஆலா விளங்குகிறார்.
நல்ல தமிழில் படைப்புகள் எழுதப்படல் வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் அவர். சாதிகளற்ற தமிழ்ச் சமூகம் மலர வேண்டும் என்கிற கனவுகளைக் கொண்டவர். கவிதையை ஓர் இயக்கமாக வளர்க்க ஆசைப்படுகிறவர். அதனால், அவரே ஓர் இயக்கமாக இருந்து ஹைக்கூ முதலான நவீனக் கவிதை வடிவங்களில் எழுதி வருகின்றார்   ( பாரதிவசந்தன், கமுக்கம், பக்.12)
            “தமிழ்மானமும், தாய்மண் பற்றும், தமிழினவுணர்வும், விரிந்த நெஞ்சமும், தொலைநோக்குப் பார்வையும், தெளிந்த சிந்தனையும், அறிவை உள்வாங்கும் ஆற்றலும், ஓயாதுழைக்கும் சுறுசுறுப்பும், ஏழ்மையில் நேர்மையும், முடித்துக் காட்டும் துணிவும், அன்பான பண்பும், பணிவும், பகுத்தறிவு நிமிர்வும், பல்கலைத்திறனும், பெற்றுயர்ந்த திறனாளி, நல்ல படைப்பாளி, சிறந்த பாட்டாளி, தோழமைக்குக் கூட்டாளி, பகைத்த வேட்டாளி, தமிழ் நாட்டாளி (புதுவை தமிழ்நெஞ்சன், கமுக்கம், பக்.106)
என்று புதுவை தமிழ்நெஞ்சனால் அடுக்கப்படும் சிறப்புக்குரிய ஆலா அவர்களின் கவிதை தொகுப்புகள் இதுவரை மூன்று வெளிவந்துள்ளன.
                        1. உயிர்வேலி           - 2001 (ஹைக்கூ தொகுப்பு)
                        2. கமுக்கம்                 - 2003 (புதுக்கவிதை தொகுப்பு)
                        3. திமுரு                     - 2004 (சென்ரியு தொகுப்பு)
            இம்முன்று தொகுதிகளையும் ஆலாவே தமது நெய்தல்பதிப்பகத்தின் மூலம் தாமே வெளியிட்டுள்ளார்.
            ஒவ்வொரு தொகுதியும் கட்டமைப்பு ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுவன. அவற்றையெல்லாம் தனித்தனியே இனி, ஆராய்கிறது இவ்வியல்.



    1.   உயிர்வேலி
            பல்வேறு புகைப்பட கவிதைகளுக்கு மத்தியில் 142 ஹைக்கூ கவிதைகள் கொண்ட உயிர்வேலிஆலாவின் முதல் தொகுப்பு.
                        “நான் பணிபுரியும் புரோட்கெம்    தொழிற்சாலையில்
                        வேலையின் போது
                        ‘நைட்ரிக் அமிலம்பட்டு
                        நிர்வாகத்தினாலும், மருத்துவர்களாலும் 
                        கவனிக்கத் தவறி வாழ்விழந்த
                        தெ.பன்னீர் செல்வம்
                      உடன் பாதிகக்கப்பட்ட
                        ஸ்ரீ.பாலாஜி ஆகிய தோழர்களுக்கும்....
                        இந்த மண்ணில் இன்னும்
                        இவ்வாறான நேர்ச்சியில் பாதிக்கப்பட்ட,
                        அனைத்து தொழிலாளர்களுக்கும்என நூலை படைக்கும் ஆலாவின் தொடக்கமே அவரது மனிதநேயத்தையும், சமூக உணர்வையும் வெளிப்படுத்துகின்றது.

            எதிர்கார்ப்புக்கு ஏற்ப, உலகமயமாதலுக்கு எதிரான குரல்களை பலவிதங்களிலும் ஹைக்கூவாக பதிவு செய்திருக்கிறார் ஆலா. பெண்ணியம், தலித்தியம், பகுத்தறிவு, சுற்றுச்சூழலியம் என்று ஹைக்கூவில் சாத்தியமாகும் முனையைத் தாண்டியும் சமூக செய்திகளை, செய்தியாகவும், கவிதையாகவும் பரிமாறியுள்ளார் இத்தொகுப்பில்.
            “சமுதாய மேம்பாட்டுக்கான கருத்துக்கள் மட்டுமே கவிதைகளாகிவிடாது. இவை செய்யுள் வடிவத்தில் இருந்தாலும் புதுக்கவிதை வடிவத்திலிருந்தாலும் கவிதையாகாது. இத்தகைய கவிதைகளுக்கான சமூகத்தேவைகள் எப்போதுமே உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் மேலான கவிதை காலத்தையும் புறம்தள்ளி என்றும் புதுமையாக நிற்பது (ராஜமார்த்தாண்டன், புதுக்கவிதைவரலாறு, பக்.90)  
என்கிற படைப்பு தூய்மைவாதிகளின் கருத்துக்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு மனதுக்குட்பட்டதை, சொல்லவேண்டும் என்று எண்ணியதை எல்லாம் கவிதையாக்கியிருக்கிறார் ஆலா.
ஆலா.... இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்ததற்கான அடையாளங்களோடு அழகழகான ஹைக்கூக்களைத் தந்திருக்கிறார் (அறிவுமதி, உயிர்வேலி, பக்.6)
என பாராட்டும் அறிவுமதியின் கூற்றுக்கு இனங்கவும், தமிழுணர்வு மேலிடவும் ஆலா, இந்நூலை தனித்தமிழில் தரமுயற்சித்துள்ளார். அவ்வாறு பயன்படுத்திய தனித்தமிழ் சொற்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள அயற்சொல்லையும் குறிப்பிட்டு நூலின் இறுதியில் ப.அருளியின் அயற்சொல் அகராதியிலிருந்து எடுத்து வழங்கியுள்ளார். (ஆலா, உயிர்வேலி, பக்.99)
                   “தலையாட்டி முறைக்கும்
                        ஓணான்
                        கல்லால் அடித்தும்”             (உயிர்.37)
இப்படி, இயற்கையைக் காட்சிப்படுத்தும் போதும் ஒரே ஒரு கருத்தை உணர்த்திவிடுகின்றன, ஆலா கவிதைகள்.
                        “பனை மரத்தைப்
                        படம் பிடித்தது
                        பனித்துளி”                             (உயிர்.60)
                        “படிக்கும் முன்
                        முகர்ந்திடுவேன்
                        புதுப்புத்தகம்”                        (உயிர்.38)


2.   கமுக்கம்
          காதல்தொகைஎன்ற அறிவிப்புடன் கமுக்கம்என்ற ஆலாவின் கவிதை தொகுப்பில், 184 புதுக்கவிதைகள் இடம் பெற்றுள்ள, அத்தனையும் காதல் கவிதைகளாக அமைந்துள்ளன.
            “இந்த நூலில் நல்ல அருமையான வார்த்தைப் பிரயோகம், பொய் கலவாத கற்பனை, நிஜமான நேசம் என்று நிறைய இடங்களில் இவருடைய காதல் கொடி கம்பீரமாய்ப் பறக்கிறது. தமிழ்மண் சார்ந்த பண்பாட்டு அடையாளங்களுடன் ஒப்பனைகள் இன்றி எழுத ஆலாவால் முடிந்திருக்கிறது என்பதைக் கவிதைகளைப் படிக்கிறபோதே உணர்ந்துகொள்ள முடிகிறது. (பாரதிவசந்தன், உயிர்வேலி, பக்.13)
            “பெண்ணின் உறுப்பெழிலை வண்ணனை செய்தும், புகழ்ந்தும் எச்சில் உறுவதைவிட்டு, அழகுப் பதுமையாய் அவளுக்கு அணி, மணி புனைந்து கிடக்காமல் இயல்பாய், இயற்கையாய், இனிமையாய், துணிவாய்காதல் இலக்கியத்தில் புதிய தடத்தைப் புதுவையில் இருந்த போட்டுத்தந்திருக்கிறார் ஆலா (புதுவை தமிழ்நெஞ்சன், கமுக்கம், பக்.102)
என்று புதுவைதமிழ் நெஞ்சன் பாராட்டும் படியாக தமிழ் சங்க கவிதைகளை அழகும், இயற்கையோடு இயைந்த வாழ்வை பின்னிய நேர்த்தியும் கொண்டதாக விளங்குகின்றன இத்தொகுப்பு கவிதைகள்.
                        “உதிர்ந்து கிடக்கும்
                        கொடுக்காப்புளிச் சுளையைப்
                        பார்க்கும் பொழுதெல்லாம்
                        செவ்வரி ஓடிய
                        உன் வெள்ளை விழிகள்
                        நினைவுக்கு வருகிறது.
                        பட்டு இதழ் இமைகளைச்
                        சட்டென்று மூடிக்கொள்-தோழி!
                        ‘மைனாக்கள்
                        கொத்திவிடப் போகிறது-உன்
                        சிவப்பேறிய விழிகளை.”                 (கமுக்.33)
            எழுதுவது காதல் கவிதையாக இருந்தாலும் அதிலும் சமூக கருத்துக்களை, உலகமய கொடுமைகளை, பண்பாடு சிதைந்து வருவதை, இயற்கை அழிந்துவருவதை, நமது பாரம்பரிய மருத்துவ, இயற்கை வாழ்வின் மகத்துவத்தை என உணர்த்தியபடியே ஆலா கவிதை புனைந்துள்ளார்.
                        “வீட்டிலிருந்து வெளியிலா போனா
                        சோத்தோட தண்ணியும்
                        கொண்டு போறாங்க - நாளைக்குக்
                        காத்தையும் தூக்கிக்கினு
                        போகவேண்டியதுதான்.
                        பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யனும்
                        மக்கள்                                   
                        மூச்சு இழுப்பது கரிவளி.
                        வெளியிடுவது உயிர்வரி.
                        தூயத்தென்றலாய் வெளிப்படுவது காதல்”           (கமுக்.31)

                        இந்த தொகுதி வடிவமைப்பு மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டது.
            1. இன்றியமையாத/புழக்கத்தில் உள்ள கவிதையில் கையாளப்பட்ட தனித்தமிழ்ச்சொற்களுக்கு புழக்கத்தில் உள்ள அயற்சொல் அகராதி தொகுத்து தந்திருப்பது. இதன்மூலம், வாசகர், அயற்சொல் தவிர்த்து தனித்தமிழ்சொல் பயன்படுத்த தூண்டுவது.
            2. காதல் கவிதை தொகுதி என்பதால், காதல் குறிப்பேடு போல, கவிதைகள் அனைத்தும் - ஆலாவின் கையெழுத்திலேயே அச்சாக்கப்பட்டுள்ளது.
            3. கவிதைகளுக்குள் மறைந்துவரும் தமிழ்ப் பண்பாடுகளை, தாரவங்களை, மருத்துவ உணவுவகைகளைப் பதிவுசெய்வதோடு - மறைந்துவரும் தமிழக விளையாட்டுக்களைப் படமாக்கி ஒவ்வொரு பக்கமும் பதிவு செய்து பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
            அவ்வகையில், டும்டும்பீபீ, கண்ணாமூச்சி, குச்சியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, சிலம்பம், தாண்டுதல், செக்கு, லாக்கு, ஆபியம், கல்பாரி, சீப்பு சோப்பு கண்ணாடி, உசுக்கோபாரி, சடுகுடு, யார்அது?, பம்பரம், கோட்டிப்புள், துருப்பு, குச்சியாட்டம், ஒருகொடம், குதிரை சில்லு, ராட்டிணம், தண்ணிக்கானு முதலான விளையாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, ஆலாவின் தமிழ் உணர்வையும், எதையும் சிரத்தையும், சிந்தனையும் கலந்தாற்றும் தொழில் வண்மையும் அறிய முடிகிறது.


     3.   திமுரு
          ஆலாவின் மூன்றாவது கவிதை தொகுதி திமுரு, இத்தொகுதியில் 104 சென்ரியூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
சென்ரியூ என்பது ஹைக்கூ வடிவ கவிதையின் இன்னொரு வடிவம். அங்கதம் என்பது சென்ரியூவின் முதல் உள்ளடக்கம், இரண்டாவது மனித நடத்தைக் கோலங்களையும், மனித பலகீனங்களையும் பற்றிய வேடிக்கை மிகுந்த கவனிப்பு.” “சென்ரியூ இயற்கை அழகைப் பற்றியல்ல. சிதரல்களையும் தோல்விகளையும் பற்றியது. (நிர்மலாசுரேஷ், சிரிக்கும் வில்லோமரம் சென்ரியூ, பக்.06)   
            ஒருவகையில் தமிழில் எழுதப்படுகிற ஹைக்கூகள் எல்லாமே சென்ரியு வகையிலேயே அடக்கமுடியும் என்பது ஆய்வாளர் கருத்து, ஆனால், தமிழகத்தில் முதலில் இவ்வடிவம் ஹைக்கூ என்றே அறிமுகமாகி எழுதப்பட்டு வந்தபின் - ஈரோடுதமிழன்பன் ஹைக்கூ, சென்ரியூ இரண்டும் வேறுவேறு; அதன் தன்மைகளைப் புரிந்து கொண்டு தனித்தனியே தொகுப்பு தேவை என்ற உணர்வுடன் முதன்முதலில் ஒரு வண்டி சென்ரியு என்ற சென்ரியுதொகுப்பை வெளியிட்டார்.(ஜெ.ராதாகிருஷ்ணன், நறுமுகை-1, பக்.08)
ஆனால், அதற்கு முன்பே நூற்றுக்கணக்கில் ஹைக்கூ தொகுப்புகள் தமிழில் இரண்டு வகைகளும் கலந்தே வெளிவந்துவிட்டன. ஆகையால், ஒட்டுமொத்தமாக பிரித்துபார்க்க முடியாமல், தமிழைச் பொறுத்தவரை ஹைக்கூஎன்றே அறிவது போதுமென்பது ஆய்வாளர் கருத்து.
            ஆனால், ஈரோடுதமிழன்பனின் ஒருவண்டிசென்ரியுநூல் வந்தபின்பு நகைச்சுவை பயக்கும் சென்ரியு வகை கவிதைகளைக் கொண்ட தனித்தொகுப்புகள் நிரம்ப வரத்தலைப்பட்டன. அவ்வகையில் குறிப்பிடத்தக்கது ஆலாவின் திமுருதொகுப்பு.
            பல்வேறு சமூக சிக்கல்களையும் தமது கவிதைகளில் பதிவு செய்த ஆலா, முந்தைய தொகுப்புகளை விட கூர்மையாகவும், அங்கதத்தோடும், கவித்துவத்தோடும் இத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.
                                    “பேருந்துசீட்டு தொலைத்துப்
                                    பதைத்துப் போனேன்
                                    பின்னால் தொலைபேசி எண்
                                                                                    (திமுரு.55)     
                        இதுபோன்ற வெறுமனே நகைப்புக்கான / விளையாட்டுக்கான கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. முதல் தொகுப்பில் இடம் பெற்ற ஒரு சில ஹைக்கூக்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன. (திமுரு. பக்.30,52)
            முந்தைய தொகுப்புகளைப் போலவே, அயற்சொல்அகராதி இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. சென்ரியு கவிதைகள் ஒன்று, இரண்டு தனித்தனியே பெரிய இடைவெளியில் பல்வேறு அழகிய புகைப்படங்களுக்கு கீழே வாசகன் மனம் கவரும் வண்ணம் அச்சிடப் பெற்றுள்ளன.    
            வழக்கத்திற்கு மாறாக, இத்தொகுப்பில் ஆலா, முன்னுரைக்கு பதிலாக ஒரு நீண்ட கவிதையை எழுதியுள்ளார். அது அவரது சமூக/தமிழ் உணர்வையும், அவரது கனவையும் உணர்த்துகின்றது.
                        “சாதியின் பெயரால்
                        சிதறிக் கிடக்கிறார்கள் தமிழர்கள்
                        திரைப்பட நடிகர்களுக்கான
                        ரசிகர் மன்றங்களின் போதையில்
                        வாழ்க்கையைச் சீரழித்துக்கொள்ளும்
                        இளைஞர்கள்.
                                                                        (திமுரு.88)
எனத் தொடங்குகிறது அவரது அவ்வுரை.

தொகுப்புரை
            தமிழ் கவிதையில் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதுக்கவிதையும், அதன் தொடர்ச்சியில் அறிமுகமான ஹைக்கூகவிதையும், அதில் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக உருவாகிய ஆலாவும், அவரது படைப்புகளும் இக்கட்டுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஆலா சுற்றுச்சூழலிய, பெண்ணிய, தலித்திய, சமூகவிமர்சன எதார்த்த எழுத்தாளராக - கலகக்காரராக அறியப்படுகிறார்.

கருத்துகள் இல்லை: